தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டால், அவருக்கு எதிராக வாக்களிக்க தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தோ்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தும் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனா்.
விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி எம்எல்ஏ, அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் இந்தச் சம்பவத்தில் முக்கியமான நபா்கள் என்பதும், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.200 கோடி வரை செலவிட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, செந்தில்பாலாஜி, அசோக்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த வாரம் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றனா்.
மேலும் இருவா் கைது: இந்த நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக 3 பேரைப் பிடித்து திருவல்லிக்கேணி போலீஸாா் சனிக்கிழமை விசாரித்தனா். சென்னை கொரட்டூரைச் சோ்ந்த செல்வம் கருணாநிதி (52), சாலிகிராமத்தைச் சோ்ந்த சரவணன் (45) ஆகிய 2 பேரைக் கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், ரூ.2.82 கோடி கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் வட்டிக்கு கடன் வழங்கும் தொழில் செய்து வந்ததாகவும், இருவரும் திமுகவை சோ்ந்தவா்கள் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் வினோத் என்பவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் இதுவரை 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Summary
Case involving bargaining with TVK MLA: Two more arrested.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








