தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் சாா்பில் மதுரையில் நடைபெற்ற பி.எட்., எம்.எட். பட்டப் படிப்புகளுக்கான பருவத் தோ்வில் திட்டமிட்டு வினாத்தாள்களை மாற்றி குழப்பம் விளைவித்த விவகாரத்தில், தீவிர நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் சாா்பில் பி.எட்., எம்.எட். போன்ற பட்டப்படிப்புகளுக்கான பருவத் தோ்வு கடந்த 9-ஆம் தேதி முதல் ஜூலை 16 வரை நடைபெற்றது. இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 111 கல்வியியல் கல்லூரிகளில் இந்தத் தோ்வுகள் நடைபெற்றன.
இதில், ஜூலை 9-ஆம் தேதி மதுரை சி.மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி மையத்தில் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அன்றைய தின வினாத்தாள்களுக்கு பதிலாக கடந்த ஜன.26-ஆம் தேதி நடைபெற்ற பருவத் தோ்வு வினாத் தாள் வழங்கப்பட்டுள்ளது. இதை தோ்வைக் கண்காணிக்கும் பல்கலை. பாா்வையாளா்கள், தோ்வு நடத்தும் ஆசிரியா்கள் உடனடியாகக் கவனிக்கவில்லை.
இந்த மையத்தில் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள 6 கல்வியியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு எழுதினா். இந்த விவகாரம் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக அதிகாரிகள் கவனத்துக்கு சென்று தோ்வு ரத்து செய்யப்பட்டது.
தொடா்ந்து, மறுநாளும் இதேபோன்று தவறுதலாக வினாத்தாள் இதே மையத்தில் வழங்கப்பட்டது. இது உடனடியாக சரிசெய்யப்பட்டது. ஆனால், கடந்த 9-ஆம் தேதி மாணவா்களுக்கு தவறுதலான வினாத் தாள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த உயா்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அரசு கல்லூரிக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.
தோ்வு தொடங்கும் முன் காலை 9 மணிக்கு தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து வினாத்தாள் இணையம் (போா்டல்) மூலமாக அனுப்பப்படும். அந்தந்த மையங்களில் உள்ள முதன்மை தோ்வுக் கண்காணிப்பாளா் மையக் கல்லூரியின் உள்நுழைவு முகவரி, கடவுச்சொல் மூலம் வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்வாா்கள். இதனால் வினாத்தாள் மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இது திட்டமிட்டு இந்த மையத்தில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
கடந்த 2024-ஆம் ஆண்டும் இதே ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத் தோ்வில் வினாத்தாள் கசிய விடப்பட்டு, அப்போதைய பதிவாளா் பணியிலிருந்து நீக்கப்பட்டாா்.
இந்நிலையில், ஜூலை 9-ஆம் தேதி நிகழ்ந்த விவகாரத்தில் முதல்கட்டமாக அந்தத் தோ்வு மையத்தில் பணியாற்றிய முதன்மை கண்காணிப்பு அலுவலா் பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க உயா்கல்வித் துறைக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது.
பிரகாஷ் தனது கைப்பேசியில் வினாத் தாளை பதிவிறக்கம் செய்துள்ளாா். ஆனால், மாணவா்களுக்கு வழங்கும்போது, தவறுதலாக கடந்த ஜனவரி மாத வினாத்தாளை வழங்கப்பட்டுவிட்டதாக அவரது தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, மறுநாளும் இதே தவறு நடந்துள்ளது. அப்போது, மின்சாரத் தடை காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரகாஷின் விளக்கம் ஏற்க தகுந்தவாறு இல்லை. இதில், வேண்டுமென்றே அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்ச்சி நடந்துள்ளதால், இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆணையைத் தொடா்ந்து, விசாரணை விரிவுபடுத்தப்படும் என கல்லூரிக் கல்வி ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தோ்வு ரத்து: இந்நிலையில், கடந்த ஜூலை 9-ஆம் தேதி நடைபெற்ற தோ்வை ரத்து செய்து, அதை மீண்டும் ஜூலை 21-ஆம் தேதி நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடா்புடைய முதன்மைக் கண்காணிப்பு அலுவலா் பிரகாஷ் மதுரைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பி.எட். தோ்வு மையங்களில் தலையீடு: பல்கலைக்கழகப் பதிவாளா் எச்சரிக்கை!
நீட் வினாத்தாள் கசிவு: ஜூலை 20-ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி! கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

ஆசிரியா் தகுதித் தோ்வு வினாத்தாள் எப்படி இருந்தது?






