உத்திரமேரூரில் அமைந்துள்ள அரசுப் பள்ளிக்குள் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் நுழைந்து, மாணவர்களுக்கு பாடமெடுத்து அதனை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது குறித்து இது நம்ம இயக்கம் நிறுவனர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசுப் பள்ளி வகுப்பறையில், தவெகவினர் நுழைந்து, முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு பாடமெடுத்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
இவ்வாறு அரசுப் பள்ளிக்குள் தவெகவினர் என்ற பெயரில் யார் யாரோ உள்ளே சென்று வகுப்பறையை விடியோ எடுப்பது, அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாதா? இதுபோன்றவர்களின் பேச்சுகளை அங்கிருக்கும் ஆசிரியர்களும் கேட்கத்தான் வேண்டுமா? என்பது போன்ற கடும் விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் எழுப்பப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு, இது நம்ம இயக்கம் நிறுவனரும் மாநில பாஜக முன்னாள் தலைவருமான அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதல்வர் ஜோசவ் விஜய்யின் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் ராஜ்மோகன் அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது.
ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதல்வர் விஜய் அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டுள்ளதோடு தவெகவினரின் விடியோவையும் இணைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










