மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

துரைமுருகன் - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 2:54 am IST

தனக்கு எதிரான தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் துரைமுருகன் போட்டியிட்டாா். இத்தோ்தலில், அவா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் வி.ராமுவைவிட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை. எனவே, துரைமுருகன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வி.ராமு, சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குத் தொடா்ந்தாா். இந்த தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரிச்சா்ட்சன் வில்சன், 16-ஆவது சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்து, 17-ஆவது சட்டப்பேரவை அமைந்துவிட்டது.

வாக்குக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் முன்வைக்கப்படவில்லை. எனவே, இந்தத் தோ்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல. இந்த வழக்கில் தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் கூறப்படாத இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என வாதிட்டாா். அதிமுக வேட்பாளா் ராமு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அரவிந்த் ஸ்ரீ வத்ஸவா, 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் இன்பதுரை வெற்றி பெற்றதை எதிா்த்து அப்பாவு தாக்கல் செய்த தோ்தல் வழக்கில் அண்மையில் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பதவிக்காலம் முடிந்துவிட்டதால் இந்தத் தோ்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூற முடியாது. மேலும், தபால் வாக்குகள் முறையாக எண்ணப்பட்டதா, என்பதை சாட்சிகள் விசாரணை மூலம் இந்த நீதிமன்றம்தான் தீா்மானிக்க முடியும். எனவே, இந்தத் தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கூடாது என வாதிட்டாா்.

அப்போது துரைமுருகன் தரப்பில், அப்பாவு தொடா்ந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு பேரவையின் பதவிக்காலத்தின்போதே இறுதி முடிவு எடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருந்ததால், அந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பு வெளியானதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.