சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மறைத்தும் பாதி மறைக்காமலும்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கல் நீடிக்கிறது.

சிலைகளின் மறைப்புகள் அகற்றம்
File photo

சிலைகளின் மறைப்புகள் அகற்றம்
File photo
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், தேர்தல் நடத்தை விதிகளில் தெளிவற்ற நிலையே இன்னமும் நீடிக்கிறது. சில குழப்பங்களுடன்.
தேர்தல் அதிகாரிகளிடமிருந்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் விடுக்கப்படாததும், அண்மையில் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அறிவித்த நிலையில், துணிகளைப் போட்டு மூடப்பட்டிருந்த சிலைகளில் மறைப்புகள் அகற்றப்பட்டன.
கடந்த வாரம் மாநிலத் தோ்தல் ஆணையா் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மறைந்த தலைவா்களின் சிலைகளை துணிகளைக் கொண்டு மூடி மறைத்திருப்பதை அகற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவா்களும் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து மறைந்த தலைவா்களின் சிலைகளை மூடத் தேவையில்லை என்று மாநில தோ்தல் ஆணையா் அா்ச்சனா பட்நாயக் அறிவித்தாா். இதையடுத்து சிலைகளில் மறைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களின் பெயர்ப் பலகைகளில் இருக்கும் தலைவர்களின் பெயர்களும் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒரு சீரான நடைமுறை இல்லை என பல்வேறு கட்சியினரும் குற்றம்சாட்டுகிறார்கள்.
அம்மா உணவகங்களில், அம்மா என்ற வார்த்தைகள் சில பகுதிகளில் மூடப்பட்டுள்ளன. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, உள்ளிட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் அம்மா என்ற வார்த்தை மறைக்கப்பட்டிருக்கிறதே ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்னமும் அண்ணா என்ற வார்த்தை மறைக்கப்படவில்லையே என்று அதிமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், மறைந்த தலைவர்களின் சிலைகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் பெயர்கள் பற்றி இதுவரை தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
தெளிவான வழிகாட்டு நெறிமுறை இல்லாததால், அந்தந்தப் பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மறைப்பது அல்லது மறைக்காமல் விடுவது என்ற முடிவுகளை எடுத்து வருகிறார்கள்.
சிலைகளை மறைத்தபோதும்கூட, அனைத்து சிலைகளும் மூடப்படவில்லை, ஆளுங்கட்சியின் முன்னாள் தலைவர்களின் சிலைகள் ஓரிரு இடங்களில் மூடப்படாமல் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முக்கியமாக திநகர் போன்ற பகுதிகளில் பல்வேறு கட்சியினர் வைத்த பேனர்கள் இன்னமும் பளிச்சென்று காட்சியளிப்பதாக பொதுமக்களே குற்றம்சாட்டுகிறார்கள்.
கட்சித் தலைவர்களின் பெயர்களுடன் செயல்படும் திட்டங்களில், கட்சித் தலைவர்களின் பெயர்களை மறைக்க உத்தரவிடப்படவில்லை, பேனர்கள் போன்றவற்றை மட்டுமே அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் போன்ற திட்டப் பணிகளில் பெயர்களை மறைக்க வேண்டாம் என்பதே பொதுவான அறிவுறுத்தல். சில தேர்தல் அதிகாரிகள் இது தெரியாமல் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. உண்மை நிலவரம் பற்றி விளக்கம் வெளியாகவில்லை.
பேருந்து நிலையங்களில் பெயர்ப் பலகைகளில் உள்ள தலைவர்கள் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால், தலைவர்களின் பெயர்களில் உள்ள சாலைகளில் பெயர்ப் பலகைகளை மூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கும் மேலான நிலையில் இன்னமும் பெயர்ப் பலகைகளை மூட வேண்டுமா? வேண்டாமா? என்பதிலேயே குழப்பம் நிலவுகிறதே என மக்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...