சென்னை திரு.வி.க.நகரில் அதிமுகவின் சின்னத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் பொற்கொடி போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று அறிவிக்கப்பட்டுள்ள 17 வேட்பாளர்களுடன் சேர்த்து, மொத்தம் 167 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
மேலும், சென்னை திரு.வி.க.நகரில் (தனி) தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி, அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் திமுகவின் சார்பில் கே.எஸ். ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.
முன்னதாக, பகுஜன் சமாஜவாதி கட்சியின் மாநிலத் தலைவரும் பொற்கொடியின் கணவருமான ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜவாதி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி நியமிக்கப்பட்டார். இருப்பினும், கட்சியில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, கட்சியிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினமான ஜூலை 5-ல் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை பொற்கொடி தொடங்கினார்.
பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளதால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் அதிமுகவின் வாக்குகளையும் பெற்று திரு.வி.க.நகரில் வெற்றி பெறும் முயற்சியில் பொற்கொடி போட்டியிடவுள்ளார்.
மேலும், தனது கணவர் கொலையில் நீதிகோரி போட்டியிடுவதாகவும் பொற்கொடி பேசியுள்ளார்.
Summary
TN Assembly Election 2026: Armstrong's Wife Porkodi, to Contest in Thiru.Vi.Ka.Nagar!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







