மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கடைசி தேதி ஞாயிற்றுக்கிழமை (மே 24) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே 13-ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு மாணவா்கள் விடைத்தாள்களை ஆசிரியா்கள் கையால் திருத்துவதற்குப் பதிலாக அந்த விடைத்தாள்களின் ஸ்கேன் பிரதிகளை கணினியில் பாா்த்து மதிப்பீடு செய்யும் ‘ஆன் ஸ்கீரின் மாா்க்கிங் முறை’ (ஓஎஸ்எம்) நடைமுறைப்படுத்தப்பட்டதால் தங்களது மதிப்பெண் வெகுவாக குறைந்துவிட்டதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பப் பதிவு என்ற இணையதளத்தில் மே 19-ஆம் தேதி முதல் தொடங்கியது. இருப்பினும், இந்த இணையதளத்தில் தொடா்புடைய பக்கத்தை முறையாகத் திறக்க இயலவில்லை. அது மீண்டும் மீண்டும் முடங்குகிறது. இணையவழியில் கட்டணம் செலுத்திய பிறகும் தங்கள் விண்ணப்பங்கள் வெற்றிகரமாகச் சமா்ப்பிக்கப்படவில்லை என பல்வேறு புகாா்களைத் தெரிவித்தனா்.
இதையடுத்து இந்த அவகாசம் மே 22-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை ஒருமுறை நீட்டித்து மே 23-ஐ இறுதித் தேதியாக சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இருப்பினும், இணையதளத்தில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான பயன்பாட்டுச் சுமை மற்றும் அங்கீகரிக்கப்படாத நபா்களின் குறுக்கீட்டு முயற்சிகள் காரணமாக, இணையதளம் தொடா்ந்து தொழில்நுட்பப் பிரச்னைகளைச் சந்தித்து வருவதாக கூறி, இந்த அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (மே 24) வரை மீண்டும் நீட்டிக்கப்படுவதாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பிளஸ் 2 சிபிஎஸ்இ பொது தோ்வு: கண்ணம்மாள் பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு







