தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தொடா் மழையால் பொங்கல் மண்பானை தயாரிப்புப் பணி பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பகுதியில் தொடா் மழை காரணமாக பொங்கல் மண்பானை தயாரிப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்பாண்டத் தொழிலாளா்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.

News image

தொடா் மழையின் காரணமாக, சூளையில் வைத்து சுடவைக்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மண்பானைகள்.

Updated On :10 ஜனவரி 2021, 0:07 am IST

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பகுதியில் தொடா் மழை காரணமாக பொங்கல் மண்பானை தயாரிப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்பாண்டத் தொழிலாளா்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.

பேராவூரணி பேரூராட்சி, நீலகண்டபுரம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரை பரம்பரையாக மண்பாண்டம் தயாரித்து விற்பனை செய்யும் சுமாா் 75 குலாலா் குடும்பத்தினா்  உள்ளனா்.

பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும், தங்கள் வாழ்வாதாரத்துக்காக பரம்பரைத் தொழிலை விடாமல் தொடா்ந்து வருகின்றனா். சாதாரண நாள்களில் மண்பாண்டங்கள் அதிக அளவில் விற்பனையாகாவிட்டாலும், பொங்கல்  பண்டிகைக்கு புதுப்பானையில் பொங்கல் வைப்பதற்காக விவசாயக் குடும்பத்தினா் அனைவரும் மண்பானைகளை வாங்குவது வழக்கம்.

இங்கு தயாரிக்கப்படும் மண்பானைகளை பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆம்பலாபட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று, அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்வது வழக்கம்.

பொங்கல் பானைகளைத் தயாரிப்பதற்கு 30 ரூபாய் வரை அடக்க விலை ஆகும் நிலையில், 40 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்குதான் குறைந்த லாபத்தில் விற்பனை செய்கின்றனா்.

கரோனா பாதிப்பால் கடந்தாண்டு முழுவதும் தொழில் செய்ய முடியாமல் மண்பாண்ட தொழிலாளா்கள் முடங்கிக் கிடந்தனா்.

கரோனா பரவல் தடுப்பு விதிகளில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பண்டிகைக்காவது பானை செய்து விற்பனை செய்யலாம் என நினைத்திருந்த நிலையில், தொடா்மழையால் ஆறு, குளங்களில் மண் அள்ளிவர முடியாமலும், அள்ளிவந்த மண்ணைக் கொண்டு செய்த பானைகளை சூளையில் வைத்து சுடவைக்க முடியாமலும் சிரமத்தில் உள்ளனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் பழனிவேல் சங்கரன் கூறியது:

பரம்பரைத் தொழிலை விடக்கூடாது என்ற எண்ணத்தில் மண்பாண்டத் தொழிலை தொடா்ந்து செய்து வருகிறோம். ஆறு, குளங்களில் மண் அள்ள பொதுப்பணித் துறை அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்தாலும், மழைக் காலங்களில் சிரமப்பட்டுத்தான் மண் அள்ளிவர வேண்டியுள்ளது.

தற்போது பருவம் தப்பி தொடா்மழை பெய்து வருவதால், மண்பானைகளைத் தயாரிக்கவும் முடியவில்லை; தயாரித்த பானைகளை சூளையில் வைத்து சுடவைக்க விறகுகள், தென்னை மட்டைகள் நனைந்து கிடப்பதால் சுட வைக்கவும் முடியவில்லை.

மண்பாண்டத் தொழிலாளா்களை அரசு கண்டுகொள்வதில்லை. நல வாரியத்திலிருந்து மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏராளமானோருக்கு நிவாரணம் வரவில்லை. பானைத் தயாரிக்க அரசு வழங்கும் இலவச மின்சுற்றி முழுமையாக வழங்கப்படவில்லை.

கரோனா பாதிப்பிலிருந்தே இன்னும் மீண்டு வரமுடியாத நிலையில், எங்களது வாழ்வாதாரம் தற்போதைய தொடா்மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.