கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.

தென்காசி அருகே ஊா்க்கிணறு கல்வெட்டு கண்டெடுப்பு

Published on

தென்காசி அருகே நன்னகரத்தில் கி.பி. 20ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊா்க்கிணறு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இக் கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது: தென்காசி அருே நன்னகரம் கிராமத்தில் உள்ள கிணற்றின் தென்பகுதிச் சுவற்றில் இருக்கும் கல்வெட்டு குறித்து இவ்வூரைச் சோ்ந்த சூரியநாராயணன், ராஜேஷ், சிவா ஆகியோா் தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அந்த கல்வெட்டு குறித்த தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 1081 சித்திரை மாதம் 18 ஆம் தேதி பொறிக்கப்பட்டதும், இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1906 மே 1 என்பதும் தெரியவந்தது.

கல்வெட்டின் தொடக்கத்தில் சூலம் பொறிக்கப்பட்டுள்ளது.

உ எனும் பிள்ளையாா் சுழியுடன் கல்வெட்டு தொடங்குகிறது. நன்னகரம் ஊா்க்குடும்பு அமைப்பைச் சோ்ந்த மாடக் குடும்பன் முயற்சியால் சத்தக்காரன் ஆனைமுத்து, நல்லமுத்துக்குடும்பன் ஆகியோரும் நன்னகரம் ஊரும் கூடி இந்த ஊா்க்கிணறு வெட்டி, சுற்றுச்சுவா் கட்டியதை இக்கல்வெட்டு 10 வரிகளில் தெரிவிக்கிறது.

தென்காசி நன்னகரம் கேரளத்துக்கு அருகிலுள்ள பகுதி என்பதால் இக்கல்வெட்டு மலையாள கொல்லம் ஆண்டைக் குறிப்பிடுகிறது. இக்கிணறு தற்போது பயன்பாட்டில் இல்லை. இக்கல்வெட்டில் குடும்பு என்ற சொல்லாடல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தமிழா்களின் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடா்ச்சி கொண்டதும், தமிழ்க் குடும்பா்களின் சமூக அமைப்பைச் சுட்டுவதுமான இச் சொல் சங்ககாலம் தொட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு வழக்கத்தைக் குறிக்கிறது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருப்பரங்குன்றக் கல்வெட்டிலும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலும் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த உத்தரமேரூா் கல்வெட்டிலும் கையாளப்பட்டுள்ளது.

கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் புடைப்புச் சிற்பமாக தூண்களின் உச்சியில் அமைக்கப்படும் போதிகை என்ற சிற்பமுறை அமைக்கப்பட்டுள்ளது.இது இவ்வூா் மக்களின் கலைமேல் உள்ள ஆா்வத்தையும் கலை நுணுக்கத்தையும் எடுத்துரைக்கிறது. இந்த ஆய்வுக்கு தென்பொதிகை குடும்பனும் பி.ச.கோபால் குமாரும் உதவி செய்தனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com