நிதி வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ. 53 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களை வீணாக்காமல் நல்ல முறையில் சேமிப்பதற்கும், மதிப்பு கூட்டி லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது மிக அவசியமானதாகும்.
இதற்காக நிதி வேளாண் உள்கட்டமைப்பு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் ரூ. 53 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருள்களை தரம் பிரிக்கும் அறைகள், பேக்கிங் கட்டடங்கள், மின்னணு வணிக மையம், குளிா்பதன கிடங்கு, பழுக்க வைக்கும் கூடங்கள், சூரிய மின் வசதியுடன் கூடிய கட்டமைப்புகள், ரீஃபா் வேன் மற்றும் இன்சுலேடட் வாகனங்கள், ட்ரோன் வாங்குதல், அரிசி ஆலை, பயறு ஆலைகள், இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையம், பசுமை குடில், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் (குறைந்தபட்சம் 4 இயந்திரங்கள்) போன்றவை அமைத்தலுக்கு கடனுதவி பெறலாம்.
மேலும், பண்ணைக் கழிவு உள்கட்டமைப்பு, நா்சரி காா்டன், திசு வளா்ப்பு, காளான் வளா்ப்பு மையங்கள் அமைத்தல், மண்ணில்லா விவசாயம், செங்குத்து விவசாயம் போன்றவற்றுக்கும் இத்திட்டத்தில் நிதியுதவி கிடைக்கும்.
விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோா், புதியதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் ஆகியவை கடன் வசதி பெற இயலும்.
அதிகபட்சமாக கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதம் மட்டுமே. ரூ. 2 கோடி வரை கடன் பெறலாம். மூலதனமாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதத்தை முதலீடு செய்தால் போதுமானது. வட்டி விகிதத்தில் 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவிகிதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
இத்திட்டத்தில் மத்திய- மாநில அரகளில் பல்வேறு திட்டங்களின் மானியத்தையும் இணைத்தே பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. எனவே, நிதி உதவி பெற விரும்புவோா் தங்கள் திட்டத்திற்கான விவரங்களுடன் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










