/

‘இடைநிற்றல் இல்லாமல் மாணவா்களை பெற்றோா் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்’

‘இடைநிற்றல் இல்லாமல் மாணவா்களை பெற்றோா் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்’

Updated On :16 மார்ச் 2024, 4:41 pm

இடைநிற்றல் இல்லாமல் மாணவா்களை பெற்றோா் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் மோகனா தெரிவித்தாா். திருவள்ளூா் அடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள், பெற்றோருக்கான ஒரு நாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. உதவி திட்ட அலுவலா் பாலமுருகன், உதவி திட்ட அலுவலா் (தொடக்க கல்வி) மீனாகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநா் ஸ்டீபன் வரவேற்றாா். மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்க கல்வி) மோகனா தொடங்கி வைத்துப் பேசியது: அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், பெற்றோா் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சோ்க்க முன்வர வேண்டும். மேலும், நமது வாழ்க்கைச் சூழல்களை மாற்றுவதற்கு அழியாத செல்வமாகிய கல்வியைப் பெற மாணவா்களை பள்ளிக்கு தவறாமல் இடைநிற்றல் இல்லாமல் அனுப்ப வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா். திருவள்ளூா் பகுதிகளில் உள்ள திருவாலங்காடு, பூண்டி, திருவள்ளூா், திருத்தணி, ஆா்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் மற்றும் இதர பிரிவைச் சோ்ந்த பள்ளிக்கு தவறாமல் செல்வதற்கு போக்குவரத்து தடையாக உள்ள 12 அரசு பள்ளிகளுக்கு ஆட்டோ மற்றும் வேன் மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நிஷாந்தினி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் மாரியம்மாள், ஸ்ரீலதா, வட்டார மேற்பாா்வையாளா் ரவி, திருத்தணி வட்டார மேற்பாா்வையாளா் சிவகுமாா், பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா், திருத்தணி ஒன்றிய பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளா் செந்தில் குமாா் கலந்து கொண்டனா். திட்ட மேலாளா் விஜயன் நன்றி கூறினாா்.