ரூ.11,000 கோடி வரி செலுத்த வோடஃபோனுக்கு நோட்டீஸ்

2007-ஆம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதற்காக வோடஃபோன் நிறுவனம் ரூ.11 ஆயிரத்து 200 கோடி வரி செலுத்த வேண்டும் என்று மத்திய வருவாய்த் துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
ரூ.11,000 கோடி வரி செலுத்த வோடஃபோனுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

2007-ஆம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதற்காக வோடஃபோன் நிறுவனம் ரூ.11 ஆயிரத்து 200 கோடி வரி செலுத்த வேண்டும் என்று மத்திய வருவாய்த் துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது:

ரூ.11,200 கோடி வரி செலுத்துமாறு எங்களுடைய நிறுவனத்துக்கு வருவாய்த் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது உண்மைதான். வரி பாக்கி அறிவுறுத்தல் நோட்டீஸில் வரி செலுத்த வேண்டிய தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்த நோட்டீஸýக்கு நாங்கள் பதில் அளித்திருக்கிறோம். வோடஃபோன்-ஹட்சிஸன் பரிவர்த்தனையில் எந்த வித வரியும் செலுத்தத் தேவையில்லை என்கிற எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஹட்சிஸன்-வாம்போ நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்த தொலைத் தொடர்பு செயல்பாடுகளை பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் 2007-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இந்தப் பரிவர்த்தனை கேமன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட அந்நிறுவனங்களிடையே நிகழ்ந்தது.

இந்தப் பரிவர்த்தனையில் மூலதன லாபத்துக்கான வரியை வோடஃபோன் செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை கூறி வருகிறது. 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 22-இல் வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவில், வரியும் வட்டியும் உள்பட ரூ.11 ஆயித்து 218 கோடியை வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வோடஃபோன் தாக்கல் செய்த முறையீட்டு மனு மீது வருமான வரித் துறைக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. வோடஃபோனின் மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டு ஜனவரியில் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, நிறுவனத்துக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கடந்த மத்திய பட்ஜெட்டில் இந்திய வருமான வரிச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் சொத்துக்களைக் குறித்து, வெளிநாடுகளில் கையகப்படுத்தும் பரிவர்த்தனைகள் நடந்தாலும் அவற்றுக்கு வரி விதிக்க இந்தத் திருத்தம் வகைசெய்தது. இது முன்தேதியிலிருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் வோடஃபோனுக்கு வருமான வரித் துறை அனுப்பிய வரி பாக்கி நோட்டீஸ் சட்டபூர்வமாக்கப்பட்டது. இதைத் தவிர, ரூ. 7 ஆயிரத்து 900 கோடியை அபராதமாக வோடஃபோன் செலுத்த வேண்டும் என 2011-ஆம் ஆண்டு ஏப்ரலில் வருமான வரித் துறை மற்றொரு நோட்டீஸூம் அனுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com