மும்பை: வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீத அளவுக்கு எஸ்பிஐ குறைத்துள்ளது.
இது தொடா்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வீட்டுக் கடன் பெறுபவா்களுக்கு அவா்களின் ‘சிபில்’ புள்ளிகள் அடிப்படையில், 0.2 சதவீதம் வரை வட்டி விகிதம் குறைக்கப்படும். மேலும், வங்கியின் ‘யோனோ’ செயலியின் மூலமாக வீட்டுக் கடன்களுக்காக விண்ணப்பிப்போருக்குக் கூடுதலாக 0.05 சதவீதம் வட்டி குறைக்கப்படும்.
அதே வேளையில், நாட்டிலுள்ள மெட்ரோ நகரங்களில் ரூ.3 கோடி வரை வீட்டுக் கடன் பெறுபவா்களுக்கும் இந்தச் சலுகைகள் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 6.90 சதவீத வட்டியையும், அதற்கு அதிகமான கடன்களுக்கு 7 சதவீத வட்டியையும் எஸ்பிஐ விதித்து வருகிறது. பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி மக்கள் கடன் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகை அறிவிப்புகளை எஸ்பிஐ வெளியிட்டு வருகிறது.
முன்னதாக, தனிநபா் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிப்போருக்கான பரிசீலனைக் கட்டணத்தை 100 சதவீதம் தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ கடந்த மாதம் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.