ஆர்பிஐ நிதிக்கொள்கை அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) இறக்கத்துடன் முடிவடைந்துள்ளன.
ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் டிச. 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நாளை(டிச. 8) நிதிக்கொள்கை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் இன்று தடுமாற்றம் ஏற்பட்டது.
நேற்று(புதன்கிழமை) என்ற 69,653.73 புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வியாழக்கிழமை) காலை 69,694.15 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
சென்செக்ஸ் ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வந்த நிலையில், வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 132.04 புள்ளிகள் குறைந்து 69,521.69 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 36.55 புள்ளிகள் குறைந்து 20,901.15 புள்ளிகளில் முடிந்தது.
நிஃப்டியில் ஆட்டோ, பிஎஸ்யூ வங்கி, பார்மா ஆகிய துறைகள் ஏற்றம் கண்டன. ஐடி, எஃப்எம்சிஜி, மெட்டல் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
நிஃப்டி பங்குகளில், பவர்கிரிட், அதானி போர்ட்ஸ், சிப்லா ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதேநேரத்தில் பார்தி ஏர்டெல், ஹெச்யுஎல், ஓஎன்ஜிசி அதிக பின்னடைவைச் சந்தித்தன.
ஆர்பிஐ தனது புதிய நிதிக்கொள்கையை நாளை அறிவிக்க உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் பலரும் அறிவிப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.