இரண்டாவது நாளாக "காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ் 390 புள்ளிகள் முன்னேற்றம்
பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் இருந்தது.


பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 390 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 112.05 புள்ளிகள் (0.62 சதவீதம்) உயர்ந்து 18,165.35-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், ஆசிய, ஐரோப்பிய சந்தைகளிலும் வர்த்தகம் நேர்மறையாக இருந்தது. இதுவும் உள்நாட்டுச் சந்தைக்கு உத்வேகம் அளித்தது. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் அதிக திறன் கொண்ட ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் வெகுவாக உயர்ந்ததும் சந்தை வலுப்பெற உதவியாக இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 60.31 புள்ளிகள் கூடுதலுடன் 60,716.03-இல் தொடங்கி, 60,569.19 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 61,110.25 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 390.02 புள்ளிகள் (0.64 சதவீதம்) உயர்ந்து 61,045.74-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 23 பங்குகள் ஆதாயம் பெற்றன.
டாடா ஸ்டீல், எல் அண்ட் டி அபாரம்: பிரபல உருக்கு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 2.72 சதவீதம், உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்ட் டி 2.41 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்சிடிஎஃப்சி, பார்தி ஏர்டெல், என்டிபிசி ஆகியவை 1 முதல் 1.80 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
டாடா மோட்டார்ஸ் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 1.65 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், அல்ட்ரா டெக் சிமென்ட், இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே, பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து விலை குறைந்த பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.89 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.282.75 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த பல நாள்களாக தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) , புதன்கிழமை ரூ.211.06 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...