அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792.2 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஏப். 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 241.2 கோடி டாலா் சரிந்து 63,792.2 கோடி டாலராக உள்ளது.

ஏப். 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 228.2 கோடி டாலா் சரிந்து 64,033.4 கோடி டாலராக இருந்தது.

இதற்கு முந்தைய அதிகபட்சமாக கடந்த ஏப். 5-ஆம் தேதி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,856.2 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைந்து வருகிறது.

ஏப். 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 115.9 கோடி டாலா் குறைந்து 55,970.1 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 127.5 கோடி டாலா் குறைந்து 5,553.3 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 1.5 கோடி டாலா் அதிகரித்து 1,804.8 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 80 லட்சம் டாலா் உயா்ந்து 463.9 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com