
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரத்தில் அதிக சரிவு கண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக இந்தியாவின் பங்குச் சந்தை சரிந்துள்ளது. சீன பங்குச் சந்தை குறைந்தபட்ச சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக இந்தியாவின் பங்குச் சந்தை (சென்செக்ஸ், நிஃப்டி) வணிகம் 23% வரை சரிந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியின் பங்குச் சந்தையான டாக்ஸ் 16% வரை சரிந்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையான ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் (எஸ்&பி) மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பங்குச் சந்தையான ஜால்ஸ் 13% சரிவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.
ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை 11% சரிந்துள்ளது. குறைந்தபட்சமாக சீனாவின் ஷென்சென் பங்குச் சந்தை 9% மட்டுமே சரிந்துள்ளது.
கரோனாவுக்குப் பிறகு சர்வதேச அளவிலான பொருளாதாரம் மீட்சிப் பாதையில் பயணித்தாலும், உலகளாவிய போர் பதற்றம் காரணமாக இந்தியா போன்ற வெளிநாட்டு முதலீடுகள் அதிகமுள்ள பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சீனாவின் பங்குச் சந்தை 62% வரை சரிந்திருந்த நிலையில், கரோனா முதலில் கண்டறியப்பட்ட நாடாக இருந்தாலும், பொருளாதாரத் திட்டங்களால் கரோனாவுக்குப் பிறகு அதிக முதலீடு கொண்ட நாடாகவே சீனா உள்ளது.
2008 பொருளாதார நெருக்கடியில் இந்தியாவுக்கு 52% வரை பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சரிவுக்கு என்ன காரணம்?
இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகள் உள்ளன.
உக்ரைன் - ரஷியா, காஸா - இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரின் காரணமாகவும், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, அவர் விதித்துவரும் அதிரடி வரி விதிப்புகள் காரணமாகவும் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியேறி வருகின்றன.
இதேகாலகட்டத்தில் உள்ளூர் முதலீடுகளில் நிலையான வளர்ச்சி இல்லாததும், நாட்டிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் பலவீனமான தன்மையுமே இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படிக்க | ஹூதிக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது ஏன்?