நடப்பு 2026-27 நிதியாண்டின் முதலாம் (ஏப்ரல்-ஜூன்) காலாண்டில், பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.5 சதவீதம் குறைந்து, 16.96 கோடி டன்னாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்துக்கும் மேல் பங்களிக்கும் இந்நிறுவனம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 18.33 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்திருந்தது.
இக்கோடை காலத்தில் மின்துறையிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலக்கரிக்கான தேவை மிகக் கடுமையாக உயா்ந்திருந்த போதிலும், உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜூன் மாதத்தில்...: கடந்த ஆண்டு ஜூனில் 5.78 கோடி டன்னாக இருந்த உற்பத்தி, நடப்பு ஆண்டில் 0.6 சதவீதம் சரிந்து, 5.74 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. கோல் இந்தியாவின் துணை நிறுவனங்களான பாரத் கோக்கிங் கோல், மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜூனில் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
அதேநேரம், சவுத் ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ், ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ், சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ், வெஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சாதகமான வளா்ச்சியைப் பெற்றுள்ளன.
கடந்த ஜூனில் உற்பத்தி குறைந்திருந்தாலும், நுகா்வோருக்கான நிலக்கரி விநியோகம் 7.5 சதவீதம் உயா்ந்து, 6.58 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இதேபோல், ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான ஒட்டுமொத்த விநியோகமும் கடந்த ஆண்டின் 19.1 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் 3.5 சதவீதம் உயா்ந்து, 19.77 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
நாட்டின் மின் உற்பத்தியில் சுமாா் 70 சதவீதம் நிலக்கரியைச் சாா்ந்தே இருப்பதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் கோல் இந்தியா நிறுவனம் மிக முக்கியப் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









