இல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக்கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும், அவன் அவ்வாறு பணியும்போது, அச்சமும் நாணமும் இன்றி நாயகனின் பணிதலை நாயகி ஏற்றுக்கொள்வதும், தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து. இந்த ஊடலும், ஊடல் உணர்த்துதலும், காம இன்பத்தை அதிகப்படுத்தும் என்பர். ...சிவநெறியில், நாயக நாயகி பாவம்கொள்ளுதல் இல்லை. ...ஆயினும், சிவநெறிச் சான்றோர்கள் பத்தியுடன் அருளிய நூல்களில், உமையின் ஊடலைத் தணிக்க, சிவபிரான் அவள் அடியை வணங்கியதாகக் கூறப்படும் கவிச்சுவை கனிந்த கற்பனை மிகுந்த பல பாடல்கள் உள்ளன. அவை, சிவத்தின் பரத்துவத்துக்குக் குறையாகச் சைவ சித்தாந்திகள் கருதுவதில்லை.