இவ்விஷயத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? அடிப்படையில், தொழில்யுகக் கல்வியின் நோக்கம் ‘உற்பத்தித் திறன்’ கொண்ட உழைப்பாளிகளை உருவாக்குவதாக மட்டுமே இருந்தது. ஆல்வின் டாப்லர், சமூக அறிவியலாளர். புகழ்பெற்ற வருங்காலக் கணிப்பு நூல்களை எழுதியவர். அவர் எழுதிய ‘மூன்றாம் அலை’ நூல் புகழ்பெற்றது. முதல் அலை, விவசாயப் பண்பாடுகள். இரண்டாம் அலை, தொழில்யுகப் பண்பாடுகள் என்றும் அவர் கூறுகிறார். 1980-களின் இறுதியிலிருந்து இப்போது உருவாகிவரும் பண்பாட்டு முழுமையை மூன்றாம் அலை என அவர் கூறுகிறார். ‘இரண்டாம் அலை’ பண்பாட்டின் கல்வி அமைப்புகள் பரவலான எழுத்தறிவை அளித்தன என அவர் சொல்கிறார். ஆனால், அவை அடிப்படையாக குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களை உள்ளுக்குள்ளாகத் திணித்தன. அவை: 1.நேரம் தவறாமை, 2. கீழ்ப்படிதல், 3. வாழ்க்கை முழுக்க ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதற்கான பயிற்சி.