வில்லியம் ஜோன்ஸ், சம்ஸ்கிருதத்துக்கும் பண்டைய கிரேக்க லத்தீன் மொழிகளுக்குமான ஒற்றுமையைக் கண்டுபிடித்தவர். ஆனால், எல்லாம் விவிலிய உண்மைகளின் வக்கரித்துப்போன பதிவுகளே இந்தியப் புராணங்கள் என அவர் எழுதினார். ஜான் பென்ட்லே (John Bentley) என்பவர், 1825-ல் இந்து வானவியல் குறித்த ஒரு நூலை எழுதினார். இதில், கிருஷ்ணன் என்கிற பெயர் உட்பட அனைத்துமே, கிறிஸ்தவ மதம் இந்தியாவில் பரவாமல் இருக்க, பிற்காலங்களில் பிராமணர்கள் உருவாக்கிய கதை என எழுதினார். ஆனால், கிறிஸ்துவின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே இந்தியாவில் கிருஷ்ண வழிபாடு நிலவியது பின்னர் நிரூபிக்கப்பட்டது. (2013-ல், பென்ட்லேயின் இந்நூல், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. எவரும் அதை விமரிசிக்கவில்லை. காரணம், அந்நூல் மீண்டும் வெளியிடப்படுவது வரலாற்றுப்பதிவாகவே அன்றி, அதிலுள்ள விஷயங்கள் உண்மை என்பதால் அல்ல என்பதை எவரும் அறிவர்). ஆனால், காலனிய காலகட்டத்தில் வரலாற்று உருவாக்கம், அகழ்வாராய்ச்சி அனைத்துமே விவிலியத்தை உண்மை வரலாறாகவும், இந்தியப் புராணங்களைக் கற்பனைகளாகவும் கருதிய ஒரு அடிப்படையில் இருந்து செயல்பட்டன.