/

பகுதி - 603

கொண்டுள்ள மோகமும் ஆசையும்

News image
Updated On :9 ஜூலை 2017, 6:30 pm


பதச் சேதம்


சொற் பொருள்

வாராய் பேதாய் கேளாய்நீ தாய் மானார்மோகத்துடன் ஆசை

 

பேதாய்: பேதையாகிய மனமே; நீ தாய்: நீ தாவி; மானார்: பெண்க(ளின் மேல்);

மாசு ஊடாடாது ஊடேபாராய் மாறா ஞான சுடர்தான் நின்று

 

ஊடாடாது: விழுந்துவிடாமல்;

ஆராயாதே ஆராய்பேறாம் ஆனா வேதபொருள் காண் என்று

 

பேறாம்: பெறத் தக்கதாம்; ஆனா: கேடில்லாத;

ஆள்வாய் நீ தான் நாதாபார் மீது ஆர் வேறுஆள்கைக்கு உரியார் தாம்

 

 

தோரா  வானோர் சேனைஆதாரா சூரா சாரல் புனமாது

 

தோரா: தோலாதவனே (தோற்காதவனே);

தோள் தோய் தோள்ஈராறா மா சூர் தூளாய்வீழ சிறு தாரை

 

சிறு தாரை: சிறியதும் கூர்மையானதுமான;

சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும்வீரா

 

சீராவாலே: (சிறிய) உடைவாளாலே;  சேதித்திடும்: துண்டாடும்;

சேயே வேளே பூவேகோவே தேவே தேவபெருமாளே.

 

பூவே: அழகனே;


வாராய் பேதாய் கேளாய் நீ தாய்... பேதையாகிய மனமே, இங்கே வா.  நான் சொல்வதைக் கேள்.  நீ தாவி,

மானார் மோகத்துடன் ஆசை மாசு ஊடாடாது ஊடே பாராய்... பெண்களின் மீது கொண்டுள்ள மோகமும் ஆசையுமான மாசுகளில் விழுந்துவிடாமல் உனக்குள்ளேயே ஆழ்ந்து பார்.

மாறா ஞானச் சுடர் தான் நின்று ஆராயாதே ஆராய்... என்றும் மாறாததாகிய ஞான ஒளிக்குள்ளே நிலைத்து நின்று, மற்றவற்றை ஆராய்வது போலில்லாமல், அந்த ஞானத்தின் துணையோடு ஆராய்ந்து பார்.

பேறாம் ஆனா வேதப் பொருள் காண் என்று ஆள்வாய்...  பெறத்தக்கதும் அழிவில்லாததுமான வேதப்பொருளைக் காண்பாய் என்று உணர்த்தி என்னை ஆண்டுகொள்ள வேண்டும்.

(மனத்தை அழைத்துப் பேசுவதாய் தொடங்கிய பாடல் இந்த இடத்திலிருந்து இறைவனை அழைத்துப் பேசுகிறது.)

நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம்... நீதான் என் தலைவன்.  இந்தப் பாரில் என்னை ஆண்டுகொள்வதற்கு உன்னையன்றி வேறு யார் இருக்கிறார்கள்?

தோரா வானோர் சேனை ஆதாரா...  தோல்வியை அறியாதவனே!  விண்ணவர் சேனைக்கு ஆதாரமாக விளங்கும் (சேனாதிபதியே!)

சூரா சாரல் புன மாது தோள் தோய் தோள் ஈராறா... சூரனே!  மலைச் சாரலில் தினைப்புனத்தில் இருந்த வள்ளியின் தோள்களை அணைத்த பன்னிரு தோளனே!

மா சூர் தூளாய் வீழச் சிறு தாரைச் சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா...  பெரிய சூரன் தூள்பட்டுப் பொடியாக விழும்படி, சிறியதும் கூர்மையானதுமான உடைவாளாலும், நீண்ட வாளாயுதத்தாலும், வேலாலும் துண்டாடி அழித்த வீரனே! 

சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே... பாலகனே!  செவ்வேளே!  அழகனே!  இறைவனே!  தேவனே!  தேவர்களுடைய பெருமாளே!


சுருக்க உரை

தோல்வியே அறியாதவனே!  தேவர்களுடைய சேனாதிபதியே!  சூரனே!  மலைச் சாரலிலே தினைப்புனத்திலிருந்த வள்ளியம்மையின் தோள்களை அணைத்த பன்னிரு தோளனே!  பெரும் சூரன் துகள்படும்படியாக அவனைச் சிறியதும் கூரானதுமான உடைவாளாலும், நீண்ட வாளாலும், வேலாலும் வீழ்த்தியவனே!  பாலகனே!  செவ்வேளே! அழகனே!  இறைவனே!  தேவனே!  தேவர்கள் பெருமாளே!

மனமென்னும் பேதையே, இப்படி வா.  நான் சொல்வதைக் கேள்.  பெண்கள்மீது நீ வைத்திருக்கும் மோகம், ஆசை என்ற குற்றத்தில் விழுந்து புரளாமல், உனக்குள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக.  மாறாத ஞான ஒளியிலே நிலைத்து நின்று மற்ற பொருட்களை ஆராய்வதுபோல் இல்லாமல் இதை ஞானத்தின் துணையோடு ஆராய்ந்து பார்ப்பாயாக. 

‘பெறத்தக்கதும் கேடற்றதும் அழிவில்லாததுமான வேதப் பொருளைக் கண்டுகொள்’ என்று எனக்கு உணர்த்தி என்னை ஆண்டருள வேண்டும்.  நாதனே!  இந்தப் பாரில் உன்னையல்லாது என்னை ஆண்டுகொள்வதற்கு உரியவர் வேறு யாரும் உளரோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.