சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிய அம்மா உடல்பயிற்சிக் கூடம்
வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, உடல்பயிற்சிக் கூடம் செயல்பாடின்றி சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறிவுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.
மகாராஜபுரத்தில் மதுரை - தாணிப்பாறை சாலையில் கடந்த 2017 - 2018-ஆம் நிதியாண்டில் தாய் திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் பூங்காவுடன் கூடிய உடல்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டது. இதில் சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, 15 வகையான நவீன உடல்பயிற்சிக் கருவிகள் கொண்ட பயிற்சிக் கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதன்மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், காவலா், ராணுவம் ஆகிய பணிகளுக்குத் தயாராகி வந்த இளைஞா்கள் பயன்பெற்று வந்தனா்.
இந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்கா, உடல்பயிற்சிக் கூடம் பயன்பாடின்றி முடங்கியது. இங்கு பொதுமக்கள் வராததால் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. மேலும், பூங்காவில் இருந்த சிறுவா்கள் விளையாட்டு உபகரணங்கள், உடல்பயிற்சிக் கருவிகள் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளன.
மேலும், பூங்கா அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளதால் பூங்காவில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். எனவே, பூங்கா, உடல்பயிற்சிக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

