ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முன்வினை...மனித முயற்சி!

தீர்க்கவே முடியாத பல நோய்கள் நாம் முன்பிறவிகளில் செய்த கர்மவினைகளின் பலனாகவே ஏற்பட்டிருக்கின்றன என்பது நமது ஸனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள கருத்து. எனவே இம்மாதிரி நோய்களுக்குத் தக்க பிராயச்சித்தங்களைச
Updated on
2 min read

தீர்க்கவே முடியாத பல நோய்கள் நாம் முன்பிறவிகளில் செய்த கர்மவினைகளின் பலனாகவே ஏற்பட்டிருக்கின்றன என்பது நமது ஸனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள கருத்து. எனவே இம்மாதிரி நோய்களுக்குத் தக்க பிராயச்சித்தங்களைச் செய்தால்தான் குணமடைய முடியும் என்பதற்கு ஆயுர்வேத நூல்களில் ஆதாரங்கள் உள்ளனவா?

எம்.எஸ்.வி.அபர்ணா, சென்னை - 33.

  வாக்படர் இயற்றிய அஷ்டாங்க சங்கிரகம் எனும் ஆயுர்வேத நூல் மனிதர்களின் ஆயுளைப் பற்றிக் கீழ்க்காணும் வகையில் கூறுகிறது.

  பழக்க வழக்கங்களைப் பொறுத்துத்தான் எல்லாப் பிராணிகளுடைய ஆயுளும் அமைகின்றன. ஆயுளின் நிறைவும் குறைவும் தெய்வத்திடமும், மனித முயற்சியிலும் அடங்கியுள்ளன. முற்பிறவியின் வினையே தெய்வம் என்றும், இப்பிறவியில் செய்வது மனித முயற்சி என்றும் சொல்லப்படுகிறது. வினைகள் உயர்ந்தது, நடுத்தரமானது, தாழ்ந்தது என மூவகைப்படும்.

  உயர்ந்த முன்வினை, உயர்வுள்ள மனித முயற்சி இரண்டின் சேர்க்கை நீண்ட இன்பமயமான ஆயுளுக்குக் காரணமாகிறது.

  தாழ்ந்த முன்வினை, தாழ்ந்த மனித முயற்சி இரண்டின் சேர்க்கை ஆயுட்குறைவுக்கும் துன்பத்திற்கும் காரணமாகும். இவற்றின் நடுநிலை, நடுநிலையான ஆயுளுக்குக்  காரணமாகிறது. இவற்றின் ஏற்றக் குறைவான சேர்க்கை நடுத்தரமான அல்லது குறைந்த ஆயுளுக்குக் காரணமாகிறது.

  வலிவற்ற முன்வினை மனித முயற்சியாலும், வலிவிழந்த மனித முயற்சி வலிவுள்ள முன் வினையாலும் அழிந்துவிடுகின்றன.

  அறிந்தோ, அறியாமலோ நல்லோர் கட்டளையை மீறுவதாலும், அவர்களால் தடுக்கப்பட்ட செயல்களைச் செய்வதாலும் ஏற்படும் நோய்கள் இவ்வுடலினால் செய்யப்பட்ட வினைப் பயனால் ஏற்படும் நோய்களெனக் கருதப்படும். காரணம் தெரியாமல் ஏற்படும் நோய்களை முன்பிறவிகளின் வினைப் பயனால் ஏற்பட்டவை எனவும் நாம் தெளிவுற வேண்டும்.

  சிறுகாரணங்களால் மிகுந்த துன்பமுண்டாக்கும் நோய்கள் இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் செய்யப்பட்ட வினைப் பயன்கள், இவை இரண்டின் சேர்க்கையால் உண்டானவை எனக் கண்டு கொள்ள வேண்டும்.

  இவற்றில் இவ்வுடலினால் செய்யப்பட்ட வினைப் பயனால் ஏற்பட்ட நோய்களின் காரணத்தை அறிந்து அதற்கு எதிரானதும், நோய்க்கு எதிரானதுமான சிகிச்சைகளைச் செய்வதால் தணிகின்றன. முன்பிறவிகளில் செய்யப்பட்ட வினைப் பயனால் ஏற்பட்ட நோய்கள் சிகிச்சையினாலும் மனித முயற்சிகளாலும் நீங்கும். மனித முயற்சிகளில்,

  மந்திரம் - வேத மந்திரங்களை உச்சரித்தல்

  ஒüடதம் - மருந்து சத்துள்ள வேரை உடலில் அணிதல்.

  மணி - இரத்தினக் கல் அணிதல்;   பலி - பூசை - கிரகங்களுக்குப் பலியிடுதல்;  காணிக்கை - அன்பளிப்பு;  வேள்வி - யாகம்;  நியமம் - கட்டுப்பாடு; பிராயச்சித்தம் - பாவத்தைக் கழிக்கச் செய்யும் சடங்கு;  பட்டினி கிடத்தல்; மங்கலச் சொற்கள் கூறுதல்;  வணங்குதல்;  புனிதத் தலங்களில் நீராடுதல் போன்றவை அடங்கும்.

  இவற்றிற்கு தெய்வ வ்யபாச்ரயம் என்று பெயர். பொதுவாக நோய் நீங்க மருந்துகளை வாய்வழியாகச் சாப்பிட்டு பசித் தீயுடன் உறவாடச் செய்து, வேக வைத்து மருந்தின் சக்தியை உள்ளே அழைத்துச் சென்று நோய் அகற்றிகளாகப் பயன்படுத்துவர். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள தெய்வ வ்யபாச்ரய சிகிச்சையில் பசித் தீயின் சம்பந்தமில்லாமலேயே முன்பிறவிகளின் வினையால் ஏற்படும் நோய்கள் நீங்குகின்றன.

  இதுபோன்ற சிகிச்சை முறைகளில், மந்திர உச்சாடனங்கள் மிகச் சரியாகவும், தெளிவாகவுமிருத்தல் அவசியம். நல்ல வேத விற்பன்னர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தித் தந்து பூஜைக்குரிய சாமான்கள் அனைத்தையும் கொடுத்து மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்யப்படும் பூஜைகளுக்கு, நல்ல பலன்கள் விரைவில் கிடைக்கும்.

  (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com