/

நற்பணி: திருவாசக அறிவியல்!

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் வாழ்க்கைத் தேடல் முடிந்துவிடும் என்ற மனோபாவத்துடன் ஜீவிக்கும் மனிதர்கள் மத்தியில், வயது உடலுக்குத்தானே தவிர மனதுக்கு இல்லை என்ற உள்ளத்துடன் கிராமப்புற அரசுப் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:27 am

வே.சுந்தரேஸ்வரன்

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் வாழ்க்கைத் தேடல் முடிந்துவிடும் என்ற மனோபாவத்துடன் ஜீவிக்கும் மனிதர்கள் மத்தியில், வயது உடலுக்குத்தானே தவிர மனதுக்கு இல்லை என்ற உள்ளத்துடன் கிராமப்புற அரசுப் பள்ளிகள்தோறும் சென்று மாணவர்களிடம் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகப் பாடல்களைப் பாடி, அதில் பொதிந்துள்ள தன்னம்பிக்கை கருத்துகளையும், அறிவியல் உண்மைகளையும் எடுத்துக்கூறி நம்பிக்கை விதைகளை விதைத்து வருகிறார் மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்த பா.பிச்சையா (67).

கடந்தாண்டு மதுரை மாவட்ட அளவில் திருவாசகம், சிவபுராணம் ஒப்புவித்தல் போட்டிகளை நடத்திய இவர், தொடர்ந்து இந்த அறப்பணிக்காக தனது நேரத்தையெல்லாம் செலவழித்து வருகிறார். அவரைச் சந்தித்தோம்.

""நான் 10}ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு ஆன்மிகப் பணியில் சிறுவயதில் இருந்தே ஈடுபாடு அதிகம். கடந்த 32 ஆண்டுகளாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை கணக்கு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.

ஓய்வுக்குப் பிறகு மதுரையில் உள்ள தத்துவானந்தா ஆசிரமத்தில் முழுநேர ஆன்மிகத் தொண்டாற்றி வந்தேன்.

திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம் மீது எனக்கு பல ஆண்டுகளாகவே அதீத பற்று உண்டு.

"திருவாசகத்திற்கு உருகார், ஒருவாசகத்திற்கும் உருகார்' என்பதுபோல், அப்பாடல்கள் சமயத்தைக் கடந்து வாழ்வியல் நெறிகளை அளிக்கும் உன்னத பாடல்கள் ஆகும். இதை சைவசமயம் சார்ந்த பாடல்களாகக் கருதாமல் அறநெறி, அறிவியல்நெறி, வாழ்வியல் நெறி சார்ந்த பார்வையாக நோக்கவேண்டும்.

இப்பாடல்கள் மூலம் மாணவ, மாணவியரிடையே நல்வழிச் சிந்தனைகளை விதைக்கும்போது அவர்களது எதிர்காலம் மகிழ்வாக இருக்கும்.

இன்றைய வானியல் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தும் பிரபஞ்ச அறிவியல் உண்மைகளை சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மெய்ஞானியான மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது நம்மை பிரமிப்பில் ஆழ்த்தத் செய்கிறது.

சமயநெறி என்பது கடவுள் வழிபாடு மட்டுமன்றி தன்னை அறிதலும் அவசியம். சாதாரண மனிதனுக்குள்ளே உறங்கிக் கிடக்கும் எல்லையற்ற விலைமதிப்பற்ற ஆற்றலை வெளிக்கொணர்ந்தால் வாழ்வின் தரம் உயரும் என்கிறார் மாணிக்கவாசகர்.

அறிவும், அன்பும் தான் சிவம் என்பதை எடுத்துக்கூறி, அறிவால் சிவமேயான மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் மகுடமாகத் திகழும் சிவபுராணம் மாணவர்களின் மனங்களை மேம்படுத்தி வாழ்வைச் சிறக்க செய்யும் என்பதால் இப்புனிதப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

மாணவர் சமுதாயத்தில் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர வேண்டும். அவர்களது நினைவுத்திறனை பாடல்கள் பாடுவதன் மூலம் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற லட்சிய நோக்குடன், தொடக்கத்தில் மாணிக்கவாசகர் பிறந்த ஊரான மதுரை அருகே உள்ள திருவாதவூரில் உள்ள ஊராட்சிப் பள்ளியில் எனது திருவாசகப் பாடல் சொற்பொழிவை தொடங்கினேன்.

மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் இந்தப் பணிக்கு கிடைத்த நல்வரவேற்பு காரணமாக, மணிவாசகர் அறக்கட்டளைத் தொடங்கி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று திருவாசக பாடல்களை மாணவர்களிடம் எடுத்துச் சொல்லி விளக்கம் தந்தேன்.

இப்பணிக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ராம.பாண்டுரெங்கன் செய்த உதவி மறக்க முடியாதது.

மேலும், தொடர்ந்து திருவாசகம் - சிவபுராணம் ஒப்புவிப்பு போட்டியை மாவட்ட அளவில் நடத்தியபோது இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு அறுசுவை மதிய உணவும், வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் தொழிலதிபர் கருமுத்து தி.கண்ணன் மனமகிழ்வுடன் வழங்கி இப்பணிக்கு ஊக்கம் அளித்தார்.

தொடர்ந்து இந்தாண்டும் பள்ளிகளில் மாநில அளவிலான திருவாசகம் குறித்த கட்டுரைப் போட்டியை நடத்திடவும் உள்ளேன். இறைவன் அருளால் இந்த நற்பணி தொடரும் என்று நம்புகிறேன்.

எனினும், தொடர்ந்து இந்தாண்டும் திருவாசகத்தில் அறிவியல், திருவாசகத்தில் வாழ்வியல், திருவாசகத்தில் அருளியல் ஆகிய தலைப்புகளில் மாநில அளவில் பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்'' என்கிறார் நம்பிக்கையுடன் பிச்சையா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.