/

கண்காட்சி: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உத்திராட்சம்!

எப்போதும் பரபரப்பாக இருக்கும் மதுரை மேலவெளி சாலையில், ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் எதிரே அமைந்துள்ள அரசு நிறுவனமான பூம்புகார் கண்காட்சிக் கூடத்தில் அந்த மாலைவேளையில் கூட்டம் வழக்கத்திற்கு மா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:52 am

வே.சுந்தரேஸ்வரன்

எப்போதும் பரபரப்பாக இருக்கும் மதுரை மேலவெளி சாலையில், ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் எதிரே அமைந்துள்ள அரசு நிறுவனமான பூம்புகார் கண்காட்சிக் கூடத்தில் அந்த மாலைவேளையில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாகவே இருந்தது. வெளியே பிளாட்பார முகப்பில் தொங்கவிடப்பட்டிருந்த ஆன்மிகப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியைக் காணத்தான் அந்தக் கூட்டம்.

பளபளப்பான செம்பு-பித்தளை விளக்குகள், தஞ்சை ஓவியங்கள், இருபக்க "பதிக்' ஓவியங்கள், மரப்பாச்சி பொம்மைகள், தரைவிரிப்புகள் என்று வழக்கமான பூம்புகார் கைத்திறப் பொருள்களுடன் ருத்திராட்சை (பொதுவாக உத்திராட்சம் என்றும் அழைப்பர்) மாலைகள், சாலிக்கிராமம், சங்குகள், நவரத்தின மாலைகள், பவளம், பானக லிங்கம் என அரிதான ஆன்மிகப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அவை பற்றி விசாரித்த போது அதில் ஆன்மிகம் மட்டுமன்றி அறிவியல் ரீதியிலும், மருத்துவ அடிப்படையிலும் பல உண்மைகள் இருப்பதைப் பற்றித் தெரிவித்தார்கள். இக் கண்காட்சியை பூம்புகார் நிறுவனத்துடன் நடத்திவரும் ஓய்வுபெற்ற பூம்புகார் மேலாளர் வி.சோமசுந்தரத்திடம் பேசினோம்.

""எனது பூர்வீகம் தென்காசியை அடுத்துள்ள எலஞ்சி கிராமம். பூம்புகார் நிறுவனத்தில் கடந்த 1960-ல் உதவியாளராகப் பணியில் சேர்ந்து பல படிநிலைகளைக் கடந்து 1999-ம் ஆண்டில் மேலாளராக ஓய்வுபெற்றேன். தமிழகத்தின் பல்வேறு பூம்புகார் கிளைகளிலும், பெங்களூருவிலும் பணியாற்றியபோது ருத்திராட்ஷை, ஸ்படிகம், நவரத்தினங்கள் போன்றவை தொடர்பான கண்காட்சிகளை நடத்தும் அனுபவம் கிடைத்தது. அப்போதுதான், இந்த ருத்திராட்ஷை பற்றிய அரிய விஷயங்களைத்  தெரிந்துகொண்டேன்.

பொதுவாக, மரச்சிற்பம் செய்வது, கோயில் விக்ரகங்கள், பஞ்சலோக சிலைகள், மணி, பஞ்சமுக விளக்கு, கோயில் வாகனம் போன்ற கைத்திற வேலைப்பாடுகள் அனைத்தும் ஆன்மிகத்தைச் சார்ந்ததே. ருத்திராட்ஷை என்பது ஒரு மரத்தின் பழத்திலிருந்து கிடைக்கும் விதைதான். இதன் முகங்களைப் பொருத்து அதன் விலையும் மாறுபடுகிறது.

ருத்திரன் என்றால் சிவன் என்றும் அட்ஷை என்றால் கண்ணீர் என்றும் பொருள்படுகிறது. சிவனின் ஆனந்தக் கண்ணீர் துளிதான் ருத்திராட்ஷை என்றும் நம்பப்படுகிறது. இது ஆன்மிக ரீதியில் உள்ள விஷயமாக இருந்தாலும், உண்மையில் ருத்திராட்ஷையில் மருத்துவ குணங்களும் உள்ளன. ஜெர்மன் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ருத்திராட்ஷைகளில் ஒருவித மின்காந்த ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதன் மூலம் மனரீதியான நோய்கள், மனஅழுத்தம், ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாக இந்தியாவில் உள்ள பானரஸ் பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் சுகாஷ் ராய் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ருத்திராட்ஷையை நீரில் சில குறிப்பிட்ட மணிநேரம் இருக்கச் செய்து அந்த நீரைப் பருகினால் சில வியாதிகள் குணமடைகின்றன.

இது சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் சில மருந்துகளுடன் கலக்கப்படுகிறது. ஆகவே, ருத்திராட்ஷையை ஒரு ஆன்மிகப் பொருள் என்றும் ஒரு மதத்தினருக்கும் மட்டும் உரித்தான பொருளாகவும் கருதக்கூடாது. எப்படி ஒரு மாம்பழம் எல்லா மதத்தினரும் உண்பதற்குப் பயன்படுகிறதோ அதேபோன்றுதான் ருத்திராட்ஷையும் பயன்படுத்தப்படுகிறது. கிறிஸ்தவர்கள்கூட ஜபம் செய்வதற்கு ருத்திராட்ஷை மாலையை வாங்கிச் செல்கின்றனர்.

நேபாளம், இந்தோனேஷியா, இந்தியா, சீனா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியாவின் சில பகுதிகளிலும், நியூசிலாந்து, மடகாஸ்கர் உள்ளிட்ட சில நாடுகளிலும் ருத்திராட்ஷை மரங்கள் காணப்படுகின்றன.

பெரும்பாலும் 4,5,6 உள்ளிட்ட முகங்கள் கொண்ட ருத்திராட்ஷைகள் பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன. இவற்றின் விலையும் மிகக் குறைவுதான். ரூ.10-க்குக் கூட கிடைக்கிறது. ஆனால், 1 முகம், 21 முகம், 30 முகம் உள்ளிட்ட சில ருத்திராட்சைகள் அரிதாக கிடைப்பதால் இவற்றின் விலை சில ஆயிரங்களில் இருந்து லட்சக்கணக்கில் வரை போகிறது.

மதுரை பூம்புகாரில்கூட 21 முகம் கொண்ட ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள ருத்திராட்ஷை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முகம் என்பது உத்திராட்ஷை விதையைப் பிளந்தால் உள்ளே காணப்படும் பகுதிகள், வெளிப்புறக் கோடுகளை வைத்து கணக்கிடப்படுகிறது.

சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ருத்திராட்ஷைகளின் மீது போலியாக கோடுகளைப் போட்டு முகங்களை ஏற்படுத்தி விற்க முயலுகின்றனர். ஆகவே, தரமான நபர்களிடம் இருந்து ருத்திராட்ஷைகளை வாங்குவது அவசியமாகும்'' என்று கூறும் சோமசுந்தரம் பணி ஓய்வுக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இக்கண்காட்சியை நடத்தி வருகிறார். இதை ஆன்மிகப் பணியாகவும், அதேவேளை ஓய்வுநேரத்தைப் பயனுள்ள வகையில் வருவாய் ஈடுட்டும் தொழிலாகவும் மேற்கொள்வதாக கூறுகிறார் இவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.