"கண்ணகி கோட்டம்' கண்ட தாத்தா!

அரிதான மனிதர்களில் ஒருவர்தான் தஞ்சையைச் சேர்ந்த 92 வயதை நிறைவு செய்துள்ள தொல்பொருள் ஆய்வறிஞர் பேராசிரியர் சி. கோவிந்தராசனார்.
"கண்ணகி கோட்டம்' கண்ட தாத்தா!
Updated on
2 min read

அரிதான மனிதர்களில் ஒருவர்தான் தஞ்சையைச் சேர்ந்த 92 வயதை நிறைவு செய்துள்ள தொல்பொருள் ஆய்வறிஞர் பேராசிரியர் சி. கோவிந்தராசனார்.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னன் வாழ்ந்த பறம்பு மலை, கொல்லிமலையில் வல்வில் ஓரியின் சிலை மற்றும் குன்று, தமிழின் மூல எழுத்து வரி வடிவங்கள், காவிரிச் சமவெளியின் தொன்மை என ஏராளமானவற்றை கண்டறிந்து ஆவணப்படுத்தியவர் இவர். 450-க்கும் மேற்பட்ட வெளியீடுகளைப் புத்தகங்களாகவும், ஆய்வுரைகளாகவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ள இவர், சிலப்பதிகாரத்தின் மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பினால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நெடுவேள் குன்றத்துப் பத்தினிக் கோட்டத்தை கண்டறியும் பொருட்டு பத்தினித் தெய்வம் கண்ணகி நடந்து சென்ற பாதையில் தானும் நடந்தே சென்று காடு, மலைகளில் 23 ஆண்டுகள் சுற்றித் திரிந்து அந்த பத்தினிக் கோட்டத்தை (கண்ணகி கோட்டம்-மதுரைக்கு மேற்கே 90 மைல் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மங்களதேவி மலையில் அமைந்துள்ள மங்களதேவி கோட்டம்) சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்திருக்கிறார்.

தஞ்சாவூர் கரந்தட்டான்குடியில் ஒரு சாதாரண ஓட்டு வீட்டில் வசித்து வரும் கோவிந்தராசனார், கரந்தை தமிழ்ச் சங்கக் கல்லூரியில் 37 ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனது இடைவிடாத தமிழ்ப் பணிக்காக, தான் எந்தப் பதவிக்காகவும், பட்டத்திற்காகவும், விருதுக்காகவும் அலைந்ததில்லை என்கிறார். இப்போது அவரை தேடி வந்துள்ளது செம்மொழி தமிழ் விருது. அவரது ""தமிழ் அறிவுத் திறத்திற்காகவும், நூற்புலமைக்காகவும்'' கடந்த 2008-09 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2012 டிசம்பரில் புதுதில்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வழங்கி கெüரவித்துள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...

கண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு?

சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். விலங்கினங்கள் முறைத்துப் பார்க்கும். அவற்றுக்கு வணக்கம் சொல்லியவாறு 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.

கண்ணகி கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு?

வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில் கண்ட மலைவாழ் மக்கள் அந்த செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து அதை கங்கையில் நீராட்டி தலைச்சுமையாக இங்கு கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து முருகவேல் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன். அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகி கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

அது கண்ணகி கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்?

மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.

மேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்னை அழைத்து கண்ணகி சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன்.

தமிழர்களின் வரலாற்றை செப்பம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணகி கோட்டம் கண்டேன். அதற்காக உழைத்தேன். பேர், புகழ், பதவி, பட்டம், விருது வரும் என நினைத்ததில்லை; ஆனால் அதெல்லாம்தான் இப்போது நடக்கிறது.

கடந்த 2000-ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி பட்டம் கொடுத்தார்கள். இப்போது யாரோ கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்த விருதைக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

தில்லி விருது விழா அனுபவம் எப்படி?

அதை ஏன் கேட்கிறீர்கள் ஐயா. "செம்மொழி தமிழ் விருது' என கூறிக் கொண்டு எல்லாவற்றையும் இந்தி மொழியில் நடத்தினார்கள். தமிழ் மொழியின் வரலாற்றை இந்தியில் விளக்கினார்கள். அது எங்களுக்கு என்ன புரியும்? எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது. இதென்ன இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டேன். அவ்வளவுதான் நம்மால் முடியும் ஐயா. என்னமோ நடக்கிறது போங்கள்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com