இன்ஃப்ளுயன்ஸராக அண்மையில் பிரபலமாகியிருப்பவர் ராதிகா சுப்ரமணியம். சமூக ஊடகங்களில் சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துவதில் தனி பாணியைக் கடைப்பிடிக்கும் இவர், 'செயற்கை நுண்ணறிவு' (ஏ.ஐ.) உருவாக்கிய பேரழகி. நாட்டின் முதல் மெய்நிகர் பயண ஆர்வலரான இவர், நிகழ்ச்சிகளில் மாடர்ன் உடைகளில் வலம் வருகிறார்.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் செயற்கை நுண்ணறிவு யுக்தியில் 'லவ் யூ' முழுநீள திரைப்படம் கன்னட மொழியில் ரூ.10 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு, அண்மையில் வெளியானது. அதே உத்தியில் ராதிகா சுப்பிரமணியத்தை 'கலெக்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் நெட்வொர்க்' நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
தமிழ், ஆங்கில மொழிகளில் சரளமாகப் பயணக் கதைகளை சுவாரசியமான முறையில் பகிர்ந்து கொள்வதால், பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. ராதிகா எங்கும் அலைய வேண்டியதில்லை. பயணச் செலவு ஒரு பைசா கிடையாது. ஓய்வு தேவை இல்லை. எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் உழைக்கலாம். முக்கியமாக, ராதிகாவுக்கு ஊதியம் தர வேண்டிய அவசியம் இல்லை.
நாடு முழுவதும் ராதிகா தனியாக பயணம் செய்வதாக நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள் குறித்த அட்டகாசப் படங்கள், காணொளியுடன் கலாசாரம், சரித்திரத்தின், இயற்கை அழகு, உணவு, தங்கும் வசதிகள் அடிப்படையிலான தகவல்களை காட்சிப்படுத்துகிறார்.
இதுகுறித்து 'கலெக்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் நெட்வொர்க்' நிறுவனத் தலைமை நிர்வாக அலுவலர் விஜய் சுப்பிரமணியம் கூறியது:
'கணினி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, முக்கிய இடங்களுக்குப் பயணிக்கும் கன்னியாக ராதிகா சித்திரிக்கப்பட்டு உள்ளார். ராதிகாவை அண்டை வீட்டு பெண்ணாக, தோழியாக உருவாக்கியுள்ளோம். ராதிகா உங்கள் இதயத்துடன் இதமாகப் பேசுவார்.
மேலை நாடுகளில் ராதிகா போல பல மெய்நிகர் பயணத் தூதுவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் தோன்றுவார். பயனர்கள் அதுதொடர்பான பதிவு போடவும், தகவல்களுக்காகத் தொடர்பு கொள்ளவும் முடியும். விளம்பரங்களும் நிகழ்ச்சியில் இடம் பெறும்' என்கிறார் விஜய் சுப்பிரமணியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.