
எடை குறைப்பு எதிர்காலத்திற்கான சாவி - ஜோதிகா!
'வாலி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. ரஜினி, கமல், விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.
இடையில் நடிப்புக்கு நீண்ட இடைவெளி விட்டிருந்தவர், தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் விடியோ வைரலாகியது. அதற்குப் பிறகு உடல் எடைக் குறைந்து காணப்பட்டார்.அது தொடர்பாகப் பேசிய அவர், '3 மாதங்களில் 9 கிலோ எடையைக் குறைத்ததற்கும், என் உள்ளத்தை மீண்டும் கண்டு
பிடிக்க உதவியதற்கும் நன்றி. என்னை சரியான திசையில் வழிநடத்தியது நடிகை வித்யா பாலனைத் தவிர வேறு யாருமல்ல'' எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், 'அக்டோபர் 2024-இல் நடிகை வித்யா பாலன் ஜிம்முக்கு செல்லாமல் எப்படி உடல் எடையைக் குறைப்பது என்பதைப் பற்றிப் பேசி, அவரின் பயண விடியோவை வெளியிட்டிருந்தார்.
வித்யாபாலனின் பயணக் கதையால் ஈர்க்கப்பட்டேன். எடை மேலாண்மை எப்போதுமே எனக்கு ஒரு போராட்டம்தான். கடுமையான உடற்பயிற்சியோ, டிரெட்மில்லில் மணிநேரம் ஓடுவது மட்டுமல்ல, குடல் ஆரோக்கியம், செரிமானம், சீரான உணவு, முறையாக ஓய்வு ஆகியவையும் அவசியம். இது உடல் எடையை மட்டுமல்ல, மன
நிலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது நான் பல ஆண்டுகளாக இருந்ததை விட அதிக உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் உணர்கிறேன். எடை குறைப்பு பயிற்சி என்பது எதிர்காலத்திற்கான சாவி. குறிப்பாக பெண்களுக்கு. இதன் மூலம் நம் உள்ளத்தை குணப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைப்பதும் நமது முக்கிய இலக்குகளாக இருக்க வேண்டும்.'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மத வெறுப்பாகத் திசை திருப்பாதீர்கள் - ஆண்ட்ரியா!
காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதிரை சவாரிப் பயணத்தை மேற்கொள்வது நாள்தோறும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான்.
ஆனால், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அந்த பைசரன் மலை உச்சியில் அமைந்துள்ள ரிசார்ட் அருகே திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். தீவிரவாதிகளின் இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இதுகுறித்து நடிகையும், பாடகருமான ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'பஹல்காமிற்கு நானும் சுற்றுலாப் பயணியாகச் சென்றுள்ளேன். தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது. அதே போல இந்த நிகழ்விற்குப் பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு, சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ள காஷ்மீர் மக்களை நினைக்கையில் என் இதயம் உடைகிறது.
நமது நாடு (மதரீதியாக) அதிகம் பிரித்து அணிதிரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம், சமூகத்திற்கு எதிரான வெறுப்பாகத் திசை திருப்பப்படாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை.நான் என் கருத்தை அடிக்கடி சொல்பவள் அல்ல. ஆனால் இந்த சூழலில் இதைச் சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடம் இல்லை. எனது பதிவின் பின்னோட்ட பகுதியிலும் இல்லை. நம் உலகிலும் இல்லை'' என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
நடிகர்களின் முகமூடி - மாளவிகா காட்டம்!
மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'தங்கலான்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். தற்போது 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாத்துறையில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், 'சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்வார்கள். அந்த முகமூடியைச் சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேசவேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால், அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள்? என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஏன் இந்த பாசாங்குத்தனம். ஆண் என்றால் ஒருமாதிரியும், பெண் என்றால் ஒருமாதிரியும் பார்க்கும் போக்கு சினிமாவில் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது? என்று தெரியவில்லை'' என்று கூறியிருக்கிறார்.