காதலனை அறிமுகம் செய்த பிரிகிடா!
தமிழில் 'ஆஹா கல்யாணம்' வெப் தொடரின் மூலம் பிரபலமாகி, 'இரவின் நிழல்', 'மாஸ்டர்', 'அயோக்யா', 'இட்லி கடை', 'மார்கன்', 'கருடன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் பிரிகிடா சகா.
இந்த நிலையில், நடிகை பிரிகிடா சகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலராக ஆனந்த் ராமை அறிவித்திருக்கிறார். இவர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'மீசையை முறுக்கு' படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு தம்பி கதாப்பாத்திரத்திலும், 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்தவர்.
தன் காதல் குறித்து நடிகை பிரிகிடா சகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'என் உலகத்தின் உன்னத நட்சத்திரத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! சின்ன வயதிலிருந்தே, ஆகச் சிறந்த அழகான காதல் கதைகள் எல்லாமே சினிமா திரையில் மட்டும்தான் இருக்கும் என்று நான் எப்போதும் நம்பி வந்தேன். படம் முடிந்து திரையில் பெயர்கள் ஓடி முடித்த பிறகும் கூட, நம் மனதை விட்டு நீங்காமல் இருக்குமே... அப்படிப்பட்ட காதல் கதைகள்!
சினிமாவை நோக்கிய என் சொந்தப் பயணத்தில், எங்கோ ஒரு புள்ளியில் எனக்கான ஒருவரை நான் கண்டுகொண்டேன். என்னைப் போலவே அவருக்கும் சினிமாவில் அதே கனவு இருந்தது. என் வாழ்க்கையின் காதலாக மாறுவதற்கு முன்பே, அவர் அமைதியாக என் சிறந்த நண்பராக மாறினார்.
மிகவும் அழகான கதைகள் எல்லாமே எப்போதும் திரைக்காக எழுதப்படுபவை அல்ல... சில கதைகள் நிஜ வாழ்க்கையில் சாதாரணமாக வாழப்படுபவை என்பதை எனக்கு நினைவூட்டியதற்கு உங்களுக்கு நன்றி. இதோ, எங்கள் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இன்று, எங்கள் உலகத்தின் அந்தச் சிறிய பக்கத்தை உங்களுக்கு முன்னால் திறந்து வைக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சாந்தனு
அன்புக் கரங்களுக்கு நன்றி - சாந்தனு!
இந்தியத் திரையுலகின் "திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பாக்யராஜ் அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அரசு மரியாதை அறிவித்த முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு சாந்தனு தனது பதிவு மூலம் நன்றி தெரிவித்திருந்தார். அதுதவிர, நேரில் வந்து அஞ்சலி செலுத்திய திரைப்பிரபலங்கள், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'திரையுலகமே என் தந்தையின் உலகம் என்றிருந்து, பின் அது எனக்குமான உலகமாக இன்னும் அகலமாக விரிந்து, ஒரு குடும்பமாக நெருங்கி, உயர்வான உறவாக உருவாகிவிட்டது.
விழுது மரமாகுமுன் விழுந்துவிட்ட ஆலமரமாய் என் தந்தையை இழந்த அன்று நான் பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாகவும், தடுமாறிய என் கால்களைத் தாங்கிக் கொண்ட பூமியாகவும், வெடித்து விடுமுன் எனக்காகத் துடித்த மாற்று இதயமாகவும் இருந்த, இருக்கின்ற, இருக்கப்போகின்ற திரையுலக ஜாம்பவான்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தவிர வேறென்ன சொல்லி என்னை நான் சமாதானப் படுத்திக் கொள்ள?' என்று தெரிவித்திருக்கிறார்.

துருவ் விக்ரமின் 4-ஆவது படம்!
இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்குத் திரையுலகத்துடன் மட்டும் நின்றுவிடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. அந்த வகையில், தங்களது நான்காவது தமிழ்த் திரைப்படத்தை பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பும், தொடக்க விழாவும் நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் சசி, செளர்யுவ், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்டனி பாக்யராஜ், ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தப் படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருணப் படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். ஷபி, கரண் அரவிந்த் குமார் கதை எழுதி இருக்கும் இந்தப் படத்துக்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை ஜெயசூர்யா மேற்கொள்கிறார்.
தேசிய விருதை வென்ற விக்ரம் மோர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். கமர்ஷியல் என்டர்டெய்னராகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருள்செலவில் தயாரிக்கின்றனர்.
"பைசன்' படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அஜித் குமார் நடிப்பில் வெளியான "குட் பேட் அக்லி', பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான "டியூட்'ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









