கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பொழுது போகாமல் பெரியவர் முதல் சிறியவர் வரை அவதியுற்று வருகின்றனர்.
குறிப்பாக சிறு பிள்ளைகளின் பெற்றோர்கள், பிள்ளைகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாமல் தாங்களாகவே செல்போனையோ, டேப்லெட்டையோ, கணினியையோ கையில் கொடுத்து ஆளை விட்டால் போதும் என்ற முடிவிற்கு வந்து விடுகின்றனர்.
இப்படி பெற்றோர்களே பிள்ளைகளுக்கு உபகரணங்களைக் கொடுத்து விட்ட பின்னர், கேட்கவா வேண்டும்? அவர்கள் மனம் போன போக்கில் இணையவெளியில் உலவி, வேண்டியது, வேண்டாதது என அனைத்தையும் பார்க்கின்றனர். பெரும்பாலும் கேம்களில் மூழ்கி தங்களது பொன்னான நேரத்தை தொலைத்து வருகின்றனர். எப்படியும் வேறுவழியில்லாமல் கம்ப்யூட்டரையோ, செல்போனையோ கொடுக்க வேண்டிய நிலை வந்து விட்ட பின்னர், அதில் உள்ள நல்ல அறிவை, திறமையை வளர்க்கும்
இணையதளங்களை பெற்றோர் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினால் குழந்தைகள் அறிவும் வளரும், திறமையும் வளரும்.
pschool.in என்ற இணையதளம் மொபைல் மற்றும் கணினியில் அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்தல், நினைவாற்றல் வளர்ப்பு, தமிழ் மொழி கற்றல், வாசித்தல், எழுதிப் பழகுதல், இலக்கணம், மொழி அறிவு, எளிமையான கணக்குகள், அலாரம், சுடோகு, குறுக்கெழுத்து, சரியான இடத்தில் பொருத்துதல் என ஏராளமானவை உள்ளன. ஆங்கிலக் கதைகள், உரையாடல்கள், கவிதைகளும் இடம் பெற்று உள்ளன.
இதன் இணைய முகவரி: www.pschool.in/