கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க உலகம் முழுவதிலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்கிறார்கள்.விதவிதமான முகக்கவசங்கள் தற்போது சந்தையில் வந்துவிட்டன. ஆயத்த அடை தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் கூட முகக்கவச தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல தையல் கலைஞர்களுக்கு பொதுமுடக்க காலத்தில் முகக்கவசம் தைப்பதால் வாழ்வாதாரம் கிடைத்துள்ளது. நடைபாதையில் ரூ 10 முதல் ரூ. 30 வரையிலான விலையில் முகக்கவசம் விற்பனை செய்யப்படுகிறது.
விருதுநகரில் ஆர்.நாகராஜன் என்பவர், வெட்டி வேர் முகக்கவசம், புளூடூத்துடன் கூடிய முகக்கவசம் ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்தாவது:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. தொடக்கத்தில் சாதாரண முகக்கவசம் ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டதும், பல பெரிய நிறுவனங்கள் முகக்கவசம் தயாரிக்கத் தொடங்கின. அப்போது முகக்கவசத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என யோசித்தேன். வெட்டி வேருடன் கூடிய முகக்கவசம் தயாரிக்கலாம் என முடிவு செய்தேன். வெட்டிவேர் மனதிற்கு இதமானதாகும். மேலும் கிருமிநாசினி எனவும் கூறலாம். மேலும் புத்துணர்ச்சியுடன் சுவாசிக்க இயலும். எனவே வெட்டிவேருடன் கூடிய முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்தேன். சுகாதாரமானது, ஆரோக்கியமானது என பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கினர். தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள வியாபாரிகள் அஞ்சல் மூலம் வாங்கினார்கள். என்னைப் போலவே பலரும் வெட்டிவேர் முகக் கவசங்கள் தயாரிக்கத் தொடங்கினர். நான் தயாரித்த முகக்கவசத்தைப் பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த முகக்கவசத்தை துவைக்கும் போது, வெட்டிவேரை எடுத்து தனியே வைத்துக் கொள்ளலாம். சுமார் 30 நாளைக்கு மேல் ஆகிவிட்டால் நாட்டு மருந்துகடைகளில் விற்கும் வெட்டிவேரை விலைக்கு வாங்கி முகக்கவசத்தில வைத்துக் கொள்ளலாம்.
இதற்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மேலும் ஏதாவது வித்தியாசமான முகக்கவசம் தயாரிக்க வேண்டும் என யோசனை செய்தேன். இதையடுத்து புளூ டூத்ஹெட் செட்டுடன் கூடிய முகக்கவம் தயாரிக்கலாம் என முடிவு செய்தேன். வெட்டிவேர் முகக்கவசம் தயாரித்ததுபோலவே இதற்கும் பை மாதிரி தையல் செய்து, புளூடூத் ஹெட்செட்டை உள்ளே வைத்து காதில் பொருத்துவது மாதிரி முகக்கவம் தயாரித்தேன்.
தற்போது செல்லிடை பேசியின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், மக்கள் எப்போதும் புளூடூத் ஹெட்செட் மூலம் பாடல்கள் கேட்பது அதிகரித்துவிட்டது. அதிலும் பொதுமுடக்கக் காலம் என்பதால் பொழுதுபோவதற்கு இந்த புளூடூத் ஹெட்செட் உதவுகிறது. இதை மனதில் கொண்டே புளூடூத் ஹெட்செட் இணைக்கப்பட்ட முகக்கவசத்தைத் தயாரித்தேன்.
தேவையில்லாத சமயத்திலும், முகக்கவசத்தைத் துவைக்கும் போதும், புளூடூத் ஹெட்செட்டை தனியே கழற்றி வைத்துக் கொள்ளலாம். இதன் விலை சுமார் ரூ.400 லிருந்து ரூ.800 வரை உள்ளது.
நான் ஏற்கெனவே காகிதத்தில் பேனா ரீபிள் வைத்து பேனா தயாரித்துள்ளேன். மேலும் முகக்கவசம் அணிவது தொடரும் நிலை உள்ளதால், வேறு வித்தியாசமாக ஏதாவது உருவாக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோன். விரைவில் மேலும் வித்தியாசமான முகக்கவசம் தயாரிப்பேன்'' என நம்பிக்கையோடு கூறினார் நாகராஜன்.