கரோனா தீநுண்மி மனிதர்களுக்குப் பலவிதமான கெடுதல்களைச் செய்துவரும் அதேவேளையில், இளம் விஞ்ஞானிகளையும் உருவாக்கி வருகிறது.
தில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களே இந்த இளம் விஞ்ஞானிகள். பொது முடக்க விடுமுறையை கரோனாவுக்கு எதிரான போராக மாற்றி, வீட்டிலிருந்தே அந்த தீநுண்மி பரவாமல் தடுக்கும் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர்.
தில்லி ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் சர்தாக் ஜெயின், கை தொடாமல் இயங்கும் தானியங்கி "டோர் பெல்' ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அல்ட்ராசோனிக் சென்சார்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி முன்பு நின்றாலே போதும், தானாக ஒலி எழுப்பும். டோர் பெல்லைத் தொடுவதன் மூலம் கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்தக் கருவி உதவும் என்று மாணவர் சர்தாக் ஜெயின் கூறுகிறார்.
இதேபோல், 9-ஆம் வகுப்பு பயிலும் மற்றொரு தனியார் பள்ளி மாணவர் சிவம் முகர்ஜி, தூய்மைப்படுத்தும் கைப்பட்டையைக் கண்டுபிடித்துள்ளார். "அபே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கைப்பட்டையை அணிந்து கொண்டு நாம் தொடும் எந்தப் பொருளும் தூய்மையாகிவிடும். கைப்பட்டையில் உள்ள சென்சார்களின் தூண்டுதலால், கைப்பட்டையில் இருந்து புறஊதாக் கதிர்களும் (யூவி), சானிட்டைசரும் பொருள்கள் மீது தெளிக்கப்பட்டுத் தூய்மையாகிவிடும். இந்த "அபே' கைப்பட்டையை ஆப் மூலமாகவும் இயக்கலாம். இதில் உள்ள சானிடைசர் தீரும்போது செல்லிடப்பேசியில் தகவல் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க எச்சரிக்கும் மூக்குக்கண்ணாடியை விநாயக் தாரா எனும் மாணவர் உருவாக்கியுள்ளார். இதில் உள்ள "இன்ஃபரா ரெட் லைட்' கண்ணாடியை அணிந்துள்ளவர்களின் அருகே ஒரு மீட்டர் தூரத்துக்குள் யார் வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும். பொது இடங்களில் செல்லும்போது இந்த மூக்குக்கண்ணாடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க உதவும்.