தோட்டம் அமைக்கலாம் வாங்க...விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும் 

விதைகளைப் பற்றியும் நாட்டு விதைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். காலநேரத்திருக்கு ஏற்ப வளரக்கூடிய செடிகள் மனிதர்களின் உடல் நிலைக்கேற்பவும்
தோட்டம் அமைக்கலாம் வாங்க...விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும் 

விதைகளைப் பற்றியும் நாட்டு விதைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். காலநேரத்திருக்கு ஏற்ப வளரக்கூடிய செடிகள் மனிதர்களின் உடல் நிலைக்கேற்பவும் தகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும் வகையிலும் விளையக்கூடியவை. உதாரணத்திற்கு வெள்ளரி, தர்பூசணி போன்ற நீர்சத்துக்கள் அதிகமிருக்கும் காய்கனிகள் மனிதர்களுக்கு உடலைகுளிர்விக்க கோடைக்காலத்தில் தேவைப்படும். இயற்கையாகவே இவை கோடையில் விளையக்கூடியவை.. அதேபோல் குளிர்காலத்திற்கு ஏற்ப புரதம் நிறைந்த பயறுவகை உணவுகள் விளையும். இவற்றை உண்பதால் குளிருக்கு தேவையான உடல் உஷ்ணம் கிடைக்கும்.
 இப்படி இயற்கையே காலநேரத்திற்கு ஏற்ப காய்கனிகளை தக்கவாறு அந்த நிலத்தில் வாழும் உயிரினங்கள் குறிப்பாக மனிதர்களுக்கு தகுந்தாற்போல் நாட்டு விதைகள் மூலம் வழங்கியது. இதனால் மனிதர்களுக்கும் சீரான உணவு அதுவும் சமச்சீர் உணவு கிடைத்தது. இன்று நமது நிலையோ தலைகீழ். எல்லா காலங்களிலும் எல்லா உணவுகளும் கிடைக்கும்... எல்லாக்காலங்களிலும் நமக்கு பீன்ஸ், அவரை, மாம்பழம், தர்பூசணி போன்ற உணவுகள் வேண்டும் என்ற நிலையில் இன்றைய சமூகம் உள்ளது. ஆனால் உடலின் தன்மை அவற்றை ஏற்க மறுக்கிறது என்பதுதான் உண்மை.
 இவ்வாறு காலநேரங்கள் விடுத்து எல்லாக் காலங்களிலும் எல்லா உணவையும் உண்போமானால் அவை அமிர்தமானாலும் உடலுக்கு நஞ்சாகும். இவ்வாறான நஞ்சே கொஞ்சம்கொஞ்சமாக உயிரைக்கொல்லும் நோயாகவும், உடல் பருமன், சர்க்கரை, ஹார்மோன் தொந்தரவுகள் போன்ற வாழ்வியல் நோய்களாகவும் சில காலத்திற்குப்பின் உருமாறுகிறது.
 அளவோடு காலநேரத்திற்கு ஏற்ப கிடைக்கும் நாட்டு காய்கறி, பழங்களின் உணவை உட்கொள்ள ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறான உணவுகள் பல நோய்களுக்கும் மருந்தாகிறது.
 எனவே மனித ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக இருப்பது நாட்டுவிதைகளும் நாட்டு விதைகளிலிருந்து கிடைக்கும் உணவுகள் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை.
 மேலும் சென்ற இதழிலேயே நாட்டு விதைகளின் நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் எதிர்ப்பு திறனையும் பற்றிப்பார்த்தோம். அதனால் வீட்டுதோட்டம் அதுவும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வளர்க்கப்படும் வீட்டுத்தோட்டத்தில் நாட்டு விதைகளை பயன்படுத்துவதே சிறந்தது.
 சரி, எங்கு கிடைக்கும் இந்த நாட்டு விதைகள் என்கிறீர்களா.. ஒரு விதையிலிருந்து ஆயிரமாயிரம் முளைப்புதிறன்கொண்ட விதைகளை பொதுவாக பாரம்பரிய விவசாயம் செய்யும் விவசாயிகளிடம், கிராமங்களில் காணப்படும் வாரச்சந்தைகளில், ஒவ்வொரு ஊர்களிலிருக்கும் கடைவீதிகளிலும் பெறலாம். பொதுவாகவே சந்தைகளில் இவ்வகையான விதைகள் எந்த ரசாயன பூச்சும் இல்லாமல் குறைந்த விலைக்கு பெறமுடியும். மேலும் ஒருமுறை வாங்கிய விதைகளிலிருந்து மீண்டும் மீண்டும் விதைகளை நாமே பெருக்கிக் கொள்வது அவசியம். இவ்வாறு செய்வதால் நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விசேஷநாட்களில் விதைகளை பரிசளிக்கலாம்.
 தொட்டிகளை தயார்செய்வது, விதைப்பது:
 சென்ற இதழ்களில் செடிகளுக்கு ஆணிவேராக இருப்பது மண் என்பதையும், செடிவளர்ச்சிக்கு மண்ணின் அவசியத்தையும் தெரிந்துகொண்டதோடு மண்கலவையை எவ்வாறு தயார்செய்வது என்றும் பார்த்தோம்.
 முதலில் ஏதேனும் ஒரு கொள்கலன் (மறுசுழற்சிமுறையில் ஏதேனும் வீட்டிலிருக்கும் தேவையற்ற டப்பாக்கள், வாலி, சாக்குப்பை போன்றவை ) அல்லது மண் தொட்டியை எடுத்துக்கொள்ளலாம்.
 தொட்டிகளை தேர்ந்தெடுக்கும் முறைகள்:
 சாதாரணமாக சந்தைகளில் மண்தொட்டிகளை பார்த்திருப்போம். விதவிதமான ஆழ அகலங்களில் இருக்கும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான செடிகளை வைக்க உதவுகிறது. உதாரணத்திற்கு ஆழம் குறைவாகவும் அகலம் அதிகமாகவும் இருக்கும் தொட்டிகள் கீரை போன்ற வேர்க்குறைவாக இருக்கும் செடிகளை வளர்க்க உதவும், அதேபோன்று ஆழம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் தொட்டிகள் வேர் அதிகம் இருக்கும் காய்கறி செடிகளை வளர்க்க உதவும். நாமும் நமது வீட்டுத்தோட்டத்திற்கு நமது செடிகளின் தேவையைப்பொறுத்து வீட்டிலிருக்கும் பொருட்களைக்கொண்டும் தொட்டிகளை தயார் செய்து கொள்ளலாம்.
 பின் அதன் அடியில் மூன்று அல்லது நான்கு இடங்களில் துளையிடவேண்டும். ஒவ்வொரு தொட்டியிலும் இவ்வாறு துளையிடுவது அவசியம். தொட்டிகளுக்கு அடியில் இவ்வாறு துளையிடுவதன் மூலம் மண் தொட்டியிலிருக்கும் அதிகப்படியான நீர் வெளியேற உதவும், மேலும் மண்ணின் உயிரோட்டம், காற்றோட்டம் போன்றவை சீராக இருக்கும். அதிகப்படியான நீர் வெளியேறாமல் இருந்தால் செடிகளின் வேர்கள் அழுகும் நிலை ஏற்படும்.
 இவ்வாறு துளையிட்ட தொட்டிகளுக்குள் தயார் செய்து வைத்திருக்கும் மண்கலவையை நிரப்பவேண்டும். பின் அவற்றில் லேசாக நீர் தெளிக்கவேண்டும்.
 இவ்வாறு தயார்செய்து வைத்திருக்கும் தொட்டிகளில் விதைகளை போடுவதற்கு முன் விதைகளை விதைநேர்த்தி செய்யவேண்டும்.
 விதைநேர்த்தி என்பது விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிப்பதற்கும், விதைகளின் நோய் மற்றும் பூஞ்சர்ண தாக்குதலில் இருந்து செடியைக்காக்கவும் செய்யக்கூடியது.
 "விளையும் பயிர்முளையிலேயே தெரியும்' என்ற பழமொழிக்கேற்ப விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்கையில் செடி வளர்ச்சி, பூச்சித்தாக்குதல், காய்ப்பு, விளைச்சல் போன்றவை சீராக இருக்கும்.
 எவ்வாறு விதைநேர்த்தி செய்வது?
 பஞ்சகவ்யா (வரும் இதழ்களில் தெரிந்துகொள்வோம்), நாட்டு பசுவின் சாணப்பால், கோமூத்திரம், நாட்டு பசுவின் மோர், பால், போன்ற ஏதேனும் ஒன்றைக்கொண்டு விதைநேர்த்தி செய்யலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு அவற்றில் ஒரு பங்கிற்கு பத்து பங்கு நீர்சேர்த்து அவற்றில் விதைகளை ஊறவைக்கவேண்டும். சற்று கனமான விதைகளை 5-6 மணி நேரமும், கனமான விதைகளை 2-3 மணிநேரமும், லேசான விதைகளை 1 மணிநேரமும் ஊறவைக்கலாம். பின் ஊறிய விதைகளை அரைமணிநேரம் நிழலில் உலர்த்தவேண்டும். அதன் பின் விதைக்கவேண்டியதுதான்.
 அடுத்த இதழில் ஒவ்வொரு செடி விதைகளையும் கீரைவிதைகளையும் எவ்வாறு விதைப்பது, உரமளிப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.
 - அடுத்த இதழில்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com