அம்மாவின் ஆசை நிறைவேற்றிய மகள்!
1977- ஆம் ஆண்டு பெங்களூருவில் தரங்கினி என்ற பெயரில் பிளாக் பிரிண்டிங் தயாரிப்பு ஆடைகள், புடவைகள் விற்பனை நிறுவனத்தைத் துவங்கிய லட்சுமி ஸ்ரீவத்ஸா, குறுகிய காலத்திற்குள் பிரபலமானதோடு


1977- ஆம் ஆண்டு பெங்களூருவில் தரங்கினி என்ற பெயரில் பிளாக் பிரிண்டிங் தயாரிப்பு ஆடைகள், புடவைகள் விற்பனை நிறுவனத்தைத் துவங்கிய லட்சுமி ஸ்ரீவத்ஸா, குறுகிய காலத்திற்குள் பிரபலமானதோடு ஏர் இந்தியா, ராயல் நேபாள் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் விமானம் பணிப்பெண்களுக்கான சீருடைகளையும் விநியோகித்து வந்தார். பிளாக் பிரிண்டிங் தொழில் இவரது குடும்பத்தினரின் பரம்பரை தொழிலாகும்.
துணிகளின் மீது ஓவியக் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கும் டிசைன்களை பலவித வண்ணங்களில் சாயம் போகாதபடி கையால் பிரிண்ட் செய்வதுதான் பிளாக் பிரிண்டிங்.
சேலைகள், மேஜைவிரிப்புகள், போர்வைகள், சோபா, தலையணை உறைகள் என பல்வேறு வகைகளில் பிளாக் பிரிண்டிங் தயாரிப்புகளை உருவாக்கி வந்த லட்சுமி ஸ்ரீவத்ஸாவின் பொருள்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
30 ஆண்டுகளாக செய்து வந்த இந்த தொழில் பாரம்பரிய தொழில் என்பதால் நிறைய கலைஞர்களை உருவாக்கியதோடு, பலருக்கும் வேலை வாய்ப்பையும் அளித்து வந்தார்.
ஆனால் தனக்குப் பின் இந்த தொழிலையும், நிறுவனத்தையும் யார் ஏற்று நடத்துவார்கள் என்ற கவலையும் லட்சுமி ஸ்ரீவத்ஸாவுக்கு ஏற்பட்டது. ஏனெனில் இவரது மகள் பத்மினி கோவிந்த் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்தார்.
இருபதாண்டுகளாக பார்த்துவந்த வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு பெங்களூரு திரும்பிய பத்மினி கோவிந்துக்கு, அவரது அம்மா நடத்திவரும் தரங்கிணி நிறுவனத்தின் மீது அதிக ஆர்வம் இல்லையென்றாலும், அம்மாவின் ஆசையை நிறைவேற்றமுடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.
லட்சுமி ஸ்ரீவத்ஸாவும் தன்னுடைய மகளை வற்புறுத்தவில்லை. 2011- ஆம் ஆண்டு லட்சுமி ஸ்ரீவத்ஸா காலமானார். பத்தாண்டுகள் அம்மாவுடன் இருந்த பத்மினி கோவிந்த், அம்மாவின் ஆசைப்படி தரங்கிணியின் இரண்டாவது கட்டத்தை எடுத்து நடத்த தீர்மானித்தார்.
இது தன்னுடைய குடும்பத்தின் பாரம்பரிய தொழில் என்றாலும் கைவினைப் பொருள் தயாரிப்பு போன்றது என்பதால், இதில் மாற்றங்களை ஏற்படுத்த நினைத்தார்.
உள்ளூர் ஓவியக் கலைஞர்களுக்கும் டிசைன்கள் உருவாக்க வாய்ப்பு அளிப்பதோடு, இதில் இளம் தலைமுறையினரை ஈடுபடுத்தி பயிற்சியளிக்கவும் தீர்மானித்தார்.
மேலும் பிளாக் பிரிண்டிங் செய்ய இயற்கை வண்ணங்களை பயன்படுத்துவதன் மூலம் குறைவான கார்பன் மற்றும் வேஸ்டேஜை சேமிக்க முடியுமென்றும் தெரிந்து கொண்டார். தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு டிசைன்களை உருவாக்கினார்.
எதிர்பார்த்ததை விட விற்பனை அதிகரித்தது. வெளிநாட்டிலும் தேவை இருமடங்காயிற்று. சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களிடையே பிளாக் பிரிண்டிங் பற்றிய கருத்தரங்கங்களை நடத்தினார்.
பீகாரில் உள்ள தொழு நோய் நோயாளிகள் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு விசைத்தறியில் துணிகள் நெய்ய பயிற்சியளித்தார். ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட இளம் வயதினருக்கு பயிற்சியளிக்கும் ஆஷா பவுண்டேஷன் ஃபார் ஆட்டிஸம் அமைப்புடன் இணைந்து செயல்பட்டார்.
தரங்கிணி நிறுவனத்தை ஏற்று திறமையுடன் நடத்திய பத்மினி கோவிந்த், கூடவே சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்ததால் அண்மையில் இவருக்கு "குளோபல் எக்கோ ஆர்ட்டிஸன்' விருது வழங்கப்பட்டது. "இது தனக்கு சமூக தொழில் முனைவோர் என்ற சிறப்பை கொடுத்திருப்பதாக கருதும் பத்மினி கோவிந்த், அம்மாவின் ஆசைப்படி நாட்டின் பாரம்பரிய தொழிலை முன்னெடுத்து நடத்துவது பெருமையாக இருக்கிறது' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...