கார்த்திகைத் தீபமெனக்
காடெல்லாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடி - கிளியே
பார்வை குளிருமடி!
காடு பொருள் கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே - கிளியே
குளிர்ந்த நிழல் கொடுக்கும்!
குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனி பறிக்கும்
மரங்கள் வெயில் மறைக்கும் - கிளியே
வழியில் தடையிருக்கும்!
மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மது சுரக்கும் - கிளியே
போவார் அடி வழுக்கும்!
பச்சை மயில் நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சரவங் கலங்கும் - கிளியே
நரியெல்லாம் ஊளையிடும்!
கல்லுரல் போன்ற முகம்
காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான் தடுக்கும் - கிளியே
வேங்கைகள் வால் நிமிர்க்கும்!
சிங்கம் புலி கரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடி - கிளியே
இயற்கை விடுதியிலே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







