/

செய்தித்தாள் தொண்டு!

காலை எழுந்ததும் செய்தித்தாள்கண்முன்னாலே வந்து விழும்!சாலையில் விரைவாய் மிதிவண்டி"சரசர' என்று பல பறக்கும்!

News image
Updated On :11 ஜூலை 2015, 3:52 pm

பூதலூர் முத்து

காலை எழுந்ததும் செய்தித்தாள்

கண்முன்னாலே வந்து விழும்!

சாலையில் விரைவாய் மிதிவண்டி

"சரசர' என்று பல பறக்கும்!

காலில் ஒன்றைக் கீழிறக்கி - வண்டியைக்

கச்சிதமாக நிறுத்திடுவான்!

அழைப்பு மணியை அழுத்திடுவான்!

ஆர்வத்தோடு தாள் தருவான்!

நாய்கள் குரைக்கும் சிலநேரம்

நன்றாய்க் கொட்டும் மழைநீரும்!

ஓய்வே இன்றித் தன் கடமை

ஒவ்வொரு நாளும் செய்திடுவான்!

விடுமுறை என்று எதுவுமில்லை

விடிந்தால் உடனே செய்தித்தாள்

கட்டுக்கட்டாய்க் காட்சி தரும்! - எடுத்து

காற்றைப் போல விரைகின்றான்!

உலகின் நடப்பை ஊர் நிகழ்வை

உடனே அறியத் துணை செய்வான்!

பலபல செய்தி விளையாட்டு

பண்பை வளர்க்கும் கதை, பாடல்!

இணைப்புகள் ஒவ்வோர் இதழுக்கும்

எல்லாம் பொறுப்பாய்த் தருகின்றான்! - இவன்

இணைப்புச் சங்கிலி உலகோடு! - நமக்கு

என்றும் இவனது பணி தேவை!

செய்தித்தாளை என்றென்றும் - வீட்டில்

சேர்த்திடும் இளைஞர் எல்லோரும்

சீர்மிகு வாழ்வைப் பெறவேண்டும்! - எனச்

சிந்தையில் அவரை வாழ்த்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.