

காசிக்குத் தாத்தாவும் சென்று வந்தார் - உடன்
களிப்போடு பிள்ளைகள் சூழ்ந்து கொண்டார்.
ஆசையாக் கூடிப் பேசுகையில் - அங்கே
ஆனந்தன் தாத்தாவைக் கேட்கலுற்றான்.
"அத்தையும் காசிக்குச் சென்று வந்தாள் - இனி
அவரைக்காய் தின்பதே இல்லையென்றாள்.
சித்தப்பா காசிக்குச் சென்று வந்தார் - இனி
சிகரெட் பிடிப்பதே இல்லையென்றார்.
பாட்டியும் காசிக்குச் சென்று வந்தாள் - இனி
பாகற்காய் தின்பதே இல்லையென்றாள்.
சீட்டாடும் பழக்கத்தை விட்டே னென்றார் - காசி
சென்று திரும்பிய மாமாவுமே.
இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் - அங்கே
ஏதேனும் ஒன்றினை விட்டு வந்தார்.
அப்படி நீயும் விட்டதென்ன? தாத்தா
அவசியம் கூறிட வேண்டு'' மென்றான்.
"கோபக்காரன் என்றே ஊரிலுள்ளோர் - என்னைக்
கூறிடுவாரன்றோ? ஆதலினால்
கோபத்தைக் காசியில் விட்டு வந்தேன்'' - என்றே
கூறினார் மறுமொழி தாத்தாவுமே.
கண்ணனும் உடனேயே, ""தாத்தா, தாத்தா நீயும்
காசியில் விட்டதும் என்ன?'' என்றான்.
"இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே...
எங்கே கவனமோ? '' என்றுரைத்தார்.
முரளியும், ""தாத்தா நீ விட்டதென்ன?'' - என்றே
மீண்டும் ஒரமுறை கேட்டிடவே
திரும்பவும் ""கோபத்தை விட்டே'' னென்றே - தாத்தா
செப்பினர் முரளியும் "ஓகோ'' என்றான்.
அருணனும் கோபுவும் அழகப்பனும் - இன்னும்
அலமுவும் கீதா காவேரியுமே
திரும்பத் திரும்ப இக்கேள்விதனைக் - கேட்கச்
சீறி எழுந்தனர் தாத்தாவுமே!
"வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா - என்ன
வேடிக்கையா இங்கே காட்டுகின்றீர்?
தோலை உரித்தே எடுத்திடுவேன்'' என்று சொல்லியே
கையில் தடி எடுத்தார்!
"கோபத்தைக் காசியில் விட்டே னென்றார் - இதோ
குண்டாந்தடியுடன் வந்ததடா!
ஆபத்து! ஆபத்து '' என்றே சொல்லி - உடன்
அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!
- அழ. வள்ளியப்பா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.