ஒவ்வொரு நாளும் மக்களுக்கு
உலகில் ஆயிரம் பொருள்தேவை.
அவ்விதப் பொருட்கள் அனைத்தையுமே
ஆக்கித் தருவன பலதொழில்கள்!
உண்ணும் உணவை விளைவிக்கும்
உழவரின் திருநாள் அமைந்ததுபோல்
மண்ணில் மற்ற தொழில்களையும்
மதிக்கும் நாட்கள் பலஉண்டு!.
பொருளை ஆக்கும் கருவிகளை
புனிதப் படுத்தி, அலங்கரித்து
அருமை உழைப்பைப் போற்றுகின்ற
"ஆயுத பூஜை' ஒருநாளாம்!
கல்வி, செல்வம், வீரமெலாம்
இனிதாய் எவர்க்கும் வாய்த்திடவே
சக்தி. திருமகள், வாணிக்கு
ஒன்பது நாட்கள் பூஜையுண்டு!
கண்டு களிக்க கொலுவைத்து
கனிவாய் பெண்களை உபசரித்து
சுண்டல், அவல்,பொரி, பொங்கலிட்டு
சுவைத்திடுவார் நவ ராத்திரியில்!!
பத்தாம் நாள் விஜயதசமி! - அன்று
துவங்கிய காரியம் வெற்றிபெறும்!!
முப்பெரும் தேவியர் அருள் கிடைக்க - முழு
மனதுடன் துதித்து அருள் பெறுவோம்!