குடும்பத்தோடு அனைவரும்
குற்றாலம்தான் போகலாம்
கொட்டும் அருவி நீரிலே
குதித்து ஆட்டம் போடலாம்!
கோடைக் கேற்ற குளிர்ச்சிதான்
குளிக்கக் குளிக்க மகிழ்ச்சிதான்!
கோடி கோடி இன்பம்தான்
ஓடிப் போகும் துன்பம்தான்!
நோய்கள் தீர்க்கும் மூலிகை
நாவி லினிக்கும் பழவகை
பாய்ந்து தாவும் குரங்குகள்
பல்லைக் காட்டிச் சிரிக்குமே!
குறத்தி சொல்லும் குறிகள்தான்
குற்றாலத்தின் சிறப்புதான்!
மறக்க முடியா காட்சிதான்
மண்ணில் இயற்கை ஆட்சிதான்!
மலையில் மேகம் தவழ்ந்திடும்
மழையில் உடலும் குளிர்ந்திடும்!
அலை அலையாய் கூட்டம்தான்
அருவி நோக்கி நகர்ந்திடும்!
அருளும் இறைவன் கோயிலில்
அருவி செய்யும் பூசைதான்
பெருமை மிக்கக் குற்றாலத்தைப்
பார்க்கப் பார்க்க ஆசைதான்!