சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம்..!
பழமை என்று எதையும் ஒதுக்கித் தள்ளாமல் அதில் காணும் வாழ்விற்குகந்த நெறிகளை "பொன்னே போல் போற்றி' நடந்தால் வாழ்க்கையில் நாம் செழிக்கலாம். சென்னை முகப்பேரில் அழகு நிலையம் நடத்தி வரும் கீதா அசோக் வாசனை திர


பழமை என்று எதையும் ஒதுக்கித் தள்ளாமல் அதில் காணும் வாழ்விற்குகந்த நெறிகளை "பொன்னே போல் போற்றி' நடந்தால் வாழ்க்கையில் நாம் செழிக்கலாம்.
சென்னை முகப்பேரில் அழகு நிலையம் நடத்தி வரும் கீதா அசோக் வாசனை திரவிய பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகளில் பின்பற்றும் அடிப்படை கொள்கை இதுதான். தொடர்ந்து பேசுகிறார்...
""என்னையும் மீறிய சில தவிர்க்க முடியாத காரணங்களால் மனம் சோர்வுற்ற நிலையில் நான் சென்னையில் உள்ள தியாகராய நகரில் ஒரு அழகு நிலையத்துக்குச் சென்றிருந்தேன். பிறரைச் சந்தோஷப்படுத்துவதிலும், பிறரை அழகுபடுத்திப் பார்ப்பதிலும் உண்டாகும் ஒரு நிறைவைப் பற்றி அப்போது எண்ணிப் பார்த்தேன். நான் மதுரையைச் சார்ந்தவள். என் கணவருக்கு திண்டுக்கல். எங்களது குடும்பமும் கூட்டுக் குடும்பம். இதனால் இந்த அலங்காரப் பயிற்சிக்குக் குடும்பத்தில் நிறையவே வாய்ப்பு. மேலும், என்னுடைய ஆர்வம் மட்டுமேயன்றி எனது சகோதரிகளும் என் மனநிலையறிந்து இந்த அரோமா தெரபியில் என்னை முழு மூச்சாய் ஈடுபடுத்திக் கொள்ளச் சொன்னார்கள். மற்ற அழகு-செய்-நிலையங்கள் போலல்லாமல் நான் இந்தத் தொழில் பற்றி கற்று பின் புதுத் தன்மையோடு இதை உருவாக்கத் திட்டமிட்டேன்.
இந்த வாசனை திரவிய முறை என்பது முழுக்க முழுக்க செடிகளிலிருந்து எடுக்கப்படும் சாற்றையே ஆதாரப்பட்டு உள்ளது. எந்த விதமான இரசாயனச் சேர்க்கையும் இதில் இல்லை. இயற்கை நமக்கு அளித்துள்ள சக்தியைத்தான் உபயோகப்படுத்துகிறோம். இதனால் வேண்டத் தகாத உபாதைகள் ஏதும் விளையாது என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். ஒரு மரம் அல்லது செடி என்று எடுத்துக் கொண்டால், அதில் உள்ள ஒவ்வொரு பாகமும் நமக்குப் பயன் தர வல்லதாக உள்ளது. நம் கண் முன்னே தோன்றும் உதாரணம் வாழைதான். இது போலவே ஆரஞ்சு (கமலா) பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் சாறு வயதாகும் தன்மையின் வெளிப்பாடுகளைத் தள்ளிப்போடும் ஆற்றல் கொண்டதாகும்.
கழுதைப்பால் மிகச் சிறந்த வகையில் உடம்புக்கு உகந்த ஈரப்பதத்தைக் கொடுக்க வல்லது. அதில் தயாரிக்கப்பட்ட சோப்பு இன்றும் வெளிநாடுகளில் ரூ.1200 வரை விலையாகிறது. இதுபோலவே அந்தக் காலத்திலிருந்தே இந்தத் தேய்த்தல் (ஸ்க்ரப்பிங்) முறை நம் சருமத்தில் உள்ள அழிந்த அணுக்களை அகற்ற கையாளப்பட்டிருக்கிறது.
பெரிய கம்பெனிகளிலிருந்தும் பல தகவல் தொழில் நுட்ப கம்பெனிகளிலிருந்தும் பெண்கள் இங்கு அனுப்பப்பட்டு தன்னைத்தானே சீராகவும், மிகச் சுத்தமாகவும் இருப்பதற்கு வேண்டிய யுக்திகளைக் கற்றுச் செல்கிறார்கள். அதிலும் முக்கியமாகச் சருமப் பாதுகாப்பு, பொடுகிலிருந்து விடுதலை, முடி கொட்டுவதைத் தவிர்த்தல் ஆகியவை பற்றி பாடம் பெறுகிறார்கள். விமானத்தில் பணி புரியும் மகளிருக்காகத் தனிச் சொற்பொழிவும் ஆற்றியுள்ளேன். தமிழ்நாடு அரசு, சென்னை கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரிலும் இங்கு நிறைய பெண்கள் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள்.
நாங்கள் நடத்தும் பாடத் திட்டம் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றது. 2001 ஆம் வருடத்தில் துவங்கினோம். சிறிய அளவில் -வீட்டளவில் -தொழில் செய்பவர்களுக்குச் சராசரியாக ரூ.3000 முதல் ரூ.5000 வரை மாத வருமானம் கிடைக்கும் என்று நம்பலாம்.
குளிக்கும்போது உபயோகப்படுத்த வேண்டிய எண்ணெய் (பாத் ஆயில்) எங்கள் தயாரிப்பில் உள்ளது. இரண்டு சொட்டு ஒரு வாளித் தண்ணீரில் கலந்து குளித்தால் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் அடைவார்கள். மருந்து உட்கொண்டு தூங்குபவர்கள் 15 நாட்களில் மருந்தை முழுமையாக நிறுத்த முடியும். உடலில் கத்தாழை வாடை இருப்பவர்களுக்கு அது அகன்று போகும்'' என்றார் கீதா அசோக்.
உளுந்தூர்பேட்டையிலிருக்கும் புவனா இவரது மாணவி. அவரது ஊரில் ஒரு அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். ""கீதா மேடத்திடம் வந்து சேர்ந்ததும் சரியான இடத்திற்கு வந்துள்ளேன் என்று உணர்ந்தேன். மேடம் எல்லாவற்றையுமே கற்றுக் கொடுக்க ஆயத்தமாக இருப்பவர். எதையும் மறைப்பது இல்லை. இந்தத் திரவியங்களின் பலன் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும் என்று உளமார எண்ணுபவர்'' என்கிறார் புவனா.
படம் : பி.ராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...