மாதமொரு மலை யாத்திரை!
மலையேற்றம் என்பது மனத்திற்கும் உடலுக்கும் பலவித நன்மைகளை அளித்து வருவதாக மருத்துவ உலகம் சொல்லி வருகிறது. அனுபவம் மூலம் இதை உணர்ந்தவரான மதுரையைச் சேர்ந்த ராமுஜி, அவர் மலையேற்றம் செய்வது மட்டுமல்லாமல் அ


மலையேற்றம் என்பது மனத்திற்கும் உடலுக்கும் பலவித நன்மைகளை அளித்து வருவதாக மருத்துவ உலகம் சொல்லி வருகிறது. அனுபவம் மூலம் இதை உணர்ந்தவரான மதுரையைச் சேர்ந்த ராமுஜி, அவர் மலையேற்றம் செய்வது மட்டுமல்லாமல் அவரோடு
ஆர்வமுள்ள அனைவரையும் ஒரு குழுவாகவும் அழைத்துச் செல்கிறார். இதற்காக "அவசியம்' என்ற அமைப்பை ஏற்படுத்திச் செயல்பட்டு வருகிறார்.
""நான் தனியார் நிறுவனங்களுக்குக் கணக்கு தணிக்கை தொடர்பான வேலைகளை எடுத்துச் செய்து வருகிறேன். பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட மலைப்பகுதி கோயில்களுக்கு அடிக்கடி சென்றுவருவேன். அப்படிப் போகும்போது என்னுடன் சில நண்பர்களையும் அழைத்துச் செல்வேன்.
இயற்கையை நேசிப்பதும் மூலிகைக் காற்றைச் சுவாசிப்பதும் மனத்திற்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்வு தருவதை அனுபவத்தின் மூலம் உணர்ந்ததால், பலரையும் இதுபோன்று அழைத்துச் செல்ல விரும்பினேன். இதனால், மலையேற்ற யாத்திரைக் குழுவைத் தொடங்கினேன். இந்தக் குழு மூலம் ஒவ்வொரு மாதமும் சனி, ஞாயிறு என இரு நாள்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட மலையைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்வோம்.
மலையடிவாரத்தில் இருந்து அதிகபட்சம் சுமார் 10 கி.மீட்டர் தூரத்துக்கு மலையேற்றப் பயணம் தொடரும். வழி நெடுகில் உள்ள மூலிகை மரங்களின் காற்று மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குச் செல்லும்போது அங்குள்ள ஆயிரக்கணக்கான அறைகளும் முழுமையாகக் காற்றால் நிரப்பப்படும் வாய்ப்பு உருவாகிறது. இதனால், பிராணவாயு உடல் முழுவதும் பரவி உடல் ஆரோக்கியம் பெருகிடும்.
மலையில் உள்ள மூலிகைக் காற்று நோய் நொடிகளைத் தீர்க்கும் குணம் கொண்டது. ரத்தம், சுவாசம் சுத்தமாகும். இதனால்தான், மலைக் கோயிலுக்குப் போவது ஆரோக்கியம் என்கிறார்கள்.
நமது கண்கள் திறந்திருக்கும்போது ஆற்றல் அதிகமாக வெளியேறுகிறது. கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கும்போது ஆற்றல் பெருகுகிறது. எங்கள் மலையேற்ற யாத்திரைக்கு இந்துக்கள் மட்டுமின்றி பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் வருகின்றனர். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பயணத்தில் கலந்துகொள்கின்றனர்.
சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முழங்கால் வலி உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்களை அழைத்துச் செல்வதில்லை.
திருவண்ணாமலை, பிரான்மலை, கஞ்சன்மலை, தபசுமலை, சுருளிமலை, பர்வத கிரி, அஷ்டகிரி, கொல்லிமலை, பச்சமலை, சதுரகிரி, சிறுமலை, தாண்டிக்குடி, வெள்ளியங்கிரி, மகேந்திரகிரி, திருப்பதி உள்ளிட்ட சுமார் 30 மலைகளைத் தேர்ந்தெடுத்து வனத்துறையின் உரிய அனுமதியுடன் அழைத்துச் செல்கிறோம்.
2005-ம் ஆண்டு முதல் இக் குழு செயல்பட்டு வருகிறது. 2009-ம் ஆண்டில் "அவசியம்' என்ற பெயரில் ஒரு டிரஸ்ட்டைப் பதிவு செய்து அதன் மூலம் நிர்வாகிகளை நியமித்து முறையாகச் செயல்பட்டு வருகிறோம்.
கிரிவலப் பாதைகளில் மரக்கன்று நடுதல், மலைக் கிராமக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறோம். 6 மாதங்களுக்கு முன்பே எந்த மலைக்கு எப்போது செல்வது என்று திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்
படுகின்றன.
"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பார்கள். குன்றில் (மலை) ஏறிச் செல்வோருக்கு மூப்பு வருவதில்லை என்பதால் அவர்கள் குமரன் போன்று இளமையாக இருப்பார்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.
மரங்களுக்கு அடியில் தெய்வங்களைச் சிலை வடிவில் வைத்தும், மலைகள், ஆறுகள், அருவிகள், காடுகள் போன்ற அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களைப் பாதுகாக்க கோயில்களை எழுப்பியும், ஈடு இணையற்ற பொக்கிஷமென இயற்கையைப் போற்றி பாதுகாத்தும் நமது முன்னோர்கள் நமக்குத் தந்துள்ளனர். ஆனால், நவீன நாகரிகம் என்ற பெயரில் கண்மூடித்தனமான சிந்தனைச் சிதைவுகளால் இயற்கையைவிட்டு நாம் விலகிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்நிலையில் மாற்றம் காணச் செய்வது அவசியமாகும். அதுவே, நமது வருங்காலத் தலைமுறையின் நலனைப் பாதுகாப்பதாக அமையும்'' என்கிறார் ராமுஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...