தமிழுக்கு முக்கியத்துவம்...!

"பெரிதினும் பெரிது செய்' என்ற  தராக மந்திரத்தை  லட்சியமாகக் கொண்டு முன்னேறியிருக்கிறது துபாய். 
தமிழுக்கு முக்கியத்துவம்...!
Updated on
2 min read


"பெரிதினும் பெரிது செய்' என்ற  தராக மந்திரத்தை  லட்சியமாகக் கொண்டு முன்னேறியிருக்கிறது துபாய்.   சின்ன துறைமுகமாக  இருந்த  துபாயின் மாற்றம்  1970-இல் தான் தொடங்கியது. இந்த 51ஆண்டு காலத்தில்  150 ஆண்டுகளின் முன்னேற்றத்தை  துபாய் கண்டுள்ளது.

ஒரு நாட்டின் கனவு  என்பது தங்கு தடை அற்ற  மின்சாரம்,  தண்ணீர் வசதி... குண்டு குழி இல்லாத  அகலமான சாலைகள், மக்களுக்குப் பாதுகாப்பு,  குற்றங்கள் இல்லாமை...என்பதுதான். இவை அனைத்தும் துபாயில் உண்டு. துபாயை  உருவாக்கியவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். பாகிஸ்தானியர்களும், பங்களாதேஷ்வாசிகளும்  கை கொடுத்து உதவினார்கள்.

விஞ்ஞானத்தில் மேலை நாடுகளை மிஞ்சமுடியாதென்று துபாய் ஆட்சியாளர்களுக்குத் தெரியும். பிறகு எப்படி  உலக மக்களின்  கவனத்தைக் கவருவது?

"பெரிதினும்  பெரிது செய்' என்ற புது மொழியை  துபாய்  சிக்கென்று  பிடித்துக் கொண்டது.

உலகிலேயே  மிகப் பெரிய  கட்டடமாக  புர்ஜ் கலிஃபா, உலகத்திலேயே மிகப் பெரிய மிராக்கிள் பூந்தோட்டம்,  உலகத்திலேயே  மிகப் பெரிய  ஜெயண்ட் வீல், ஸ்பா குளியல் நிலையம், பனிச்சறுக்கு போல பாலைவன மணல் மலையில் சறுக்கி விளையாடுவது, 7 நட்சத்திர  விடுதி, மிகப் பெரிய செயற்கைத் தீவு, மிகப் பெரிய தங்க மோதிரம்...  என்று பட்டியல் நீளுகிறது.

புதிதாகச் சேர்ந்திருப்பது  "நாளைய அருங்காட்சியகம்' . இதன்  கட்டிய அமைப்பே  தனி அழகு. சென்ற மாதம் தான் திறக்கப்பட்டது. அதற்குள் உலக மக்களின்  கவனத்தைக் கவர்ந்து விட்டது. இந்த  7  அடுக்கு கட்டடத்தில்   பல்வேறு தலைப்புகளில்  அருங்காட்சியகம்  காட்சிப்படுத்தியுள்ளது. அந்த தலைப்புகளை  உலக  மொழிகள்  சிலவற்றில்  எழுதிவைத்துள்ளது.  அந்த மொழிகளில் தமிழ் மொழியும் உண்டு.

கலாசாரத்திற்காக, படைப்பாற்றலுக்காக, நம் சந்ததிகளுக்காக, சமத்துவத்திற்காக,  இயற்கைக்காக, கடவுளுக்காக ... என்று  தலைப்புகளை தமிழில் எழுதி வைத்துள்ளார்கள்.

உலகத்தின்  மிகப் பெரிய  கட்டடமாக  "புர்ஜ் துபாய்'  கட்டப்பட்ட  போது, பல்லாயிரம்  கோடிகள் முதலீடு செய்தும்  கட்டடம்  நிறைவு   பெற மேலும் பல்லாயிரம்  கோடிகள் தேவைப்பட,  நிதி பற்றாக்குறையால் துபாய் அரசு  கைகளை பிசையத் தொடங்கிவிட்டது. அண்டை அரசான அபுதாபியிடம்  உதவி கேட்க.... "புர்ஜ் துபாய்'  என்பதை "புர்ஜ் கலிஃபா' என்று மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்   கேட்ட நிதியை  அபுதாபி வழங்கியதாம். கட்டடமும் நிறைவு பெற்றது.

துபாய்  விமான  நிலையம்  விரிந்து   பெரிதாகி, உலகிலேயே அதிக பயணிகள் வந்து போகும்   விமான  நிலையம்  என்ற பெருமையை கடந்த  8  ஆண்டுகளாகத்  தக்கவைத்திருக்கிறது. துபாய் எக்ஸ்போ 2020 இந்த மாதம் 31-இல் நிறைவுறுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசம்.  இங்கு  இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்  இசை நிகழ்ச்சிகளை இலவசமாகக் கேட்கலாம். ரகுமான்  மூன்றாவது  தடவையாக  எக்ஸ்போ -இல் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்.

காகிதத்தில்  தான் அரசே  நடக்கிறது. நகரும், நகராத  சிவப்பு நாடா  கோப்புகளில் காகிதம்தான்  உள்ளது. காகிதம் இல்லா  அரசு  இயந்திரம்  இன்றும் பல நாடுகளில் கனவாக  இருக்கும் போது,  துபாய் அரசு சென்ற  ஆண்டிலிருந்து நூறு சதவிகிதம்  காகிதம் இல்லாமல்  அரசு  இயங்கும்  என்று  அறிவித்ததுடன் நிற்காது நடைமுறைப்படுத்தியும்  வருகிறது.

எத்தனையோ  நவீனமாக மாறிவிட்ட  துபாய்  தனது  புராதனங்களை  அல் ஸீஃப்  பகுதியில்  அப்படியே  பாதுகாத்து வருகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு அவர்கள்  எந்த  நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. சாலையில் யாரேனும்  குறுக்கே நடந்தால்  வாகனங்களை நிறுத்திவிடுவார்கள்.  சாலைக்கு கடக்கும் வரை காத்திருந்து  வாகனங்களை இயக்கத் தொடங்குகிறார்கள் ...!  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com