பெ.பெரியார்மன்னன்
'அகில இந்திய அளவில் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் அமர்வுக் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற உறுதுணையாக இருப்பேன்.
இந்தப் போட்டியை மாநில அரசுகளும், தேசிய கிரிக்கெட் ஆணையமும் அங்கீகரித்து மாற்றுத்திறனாளிகளும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க வழிவகை செய்ய வேண்டும்'' என்கிறார் வி.வேலுசாமி.
சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட வாழப்பாடியை அடுத்த மத்தூர் எனும் குக்கிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்தவர் வேலுசாமி. நடக்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளியான இவர் ஆட்டோ ஓட்டுநர்.
அவரிடம் பேசியபோது:
'அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியிலும், தமிழ்நாடு பாராலம்பிக் விளையாட்டுச் சங்கம் மதுரை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியிலும் தங்கப்பதக்கங்களைப் பெற்றேன். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து, அவர்களுக்குள் மறைந்திருக்கும் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து சமூகத்தில் அங்கீகாரம் பெற வைக்கும் எண்ணத்தில், 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சேலம் கிழக்கு' என்ற தன்னார்வ இயக்கத்தை இரு ஆண்டுக்கு முன்னர் தொடங்கி, வழிநடத்தி வருகிறேன்.
வாழப்பாடி விளையாட்டுச் சங்கத்தினர் கொடுத்த முறையான பயிற்சியாலும், எனது சொந்த முயற்சியாலும், மாற்றுத்திறனாளிகளுக்காக மைதானத்தில் அமர்ந்து கொண்டு விளையாடும் வகையில் நடத்தப்படும் அமர்வுக் கிரிக்கெட் விளையாட்டில் கை தேர்ந்துள்ளேன். இந்திய அமர்வுக் கிரிக்கெட் சங்கம் நடத்திய போட்டியில் தேர்ச்சி பெற்று, தேசிய அளவிலான அமர்வுக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்ததோடு, பிறவியிலேயே காலில் ஏற்பட்ட ஊனமும் என்னை வாட்டி வதைத்தது. இருப்பினும், எனக்குள் இருந்த திறன்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தி இந்தச் சமூகத்தில் உடல் ஊனத்தை தகர்த்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றேன்.
நான் மட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி, பல்வேறு தனித்திறன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து, சமூக அங்கீகாரத்தை அளிக்க வழிகாட்டுகிறேன்'' என்கிறார் வேலுசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









