புஜ்ஜி
உலகம் முழுவதும் ஏழு கண்டங்களில் உள்ள உயர்ந்த மலைச்சிகரங்களில் ஏறுவதே முதன்மை இலக்கு' என்கிறார் உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றிக்கொடி நாட்டிய சென்னையைச் சேர்ந்த சாதனை சிறுமி நிஷா சிவக்குமார்.
அவர், மே 25-இல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். ஏற்கெனவே நேபாளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 187 நாள்களில் சிகரத்தை அடைந்த நிலையில், நிஷா வெறும் 80 நாள்களில் இந்தச் சிறப்பைப் பெற்றார்.
இதுதொடர்பாக நிஷா கூறியது:
சிறுவயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது எனது நோக்கமாகும். எனது பெற்றோர் மிகவும் ஊக்கம் அளித்தனர். 14 வயது முதல் இதற்காக ஜிம்மில் கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டேன். மலையேற்றப் பயிற்சி, பாறைகளில் ஏறிச் செல்வதற்காக பெங்களூரு, மைசூரு கனகபுரா பகுதியில் மலைப் பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டேன்.
எனது முன்னோடியாக மலையேற்றத்தில் பல்வேறு கின்னஸ் சாதனைகள் படைத்தவரும், இங்கிலாந்தின் சிறப்பு கமாண்டோ படை வீரருமான நிர்மல் புர்ஜா உள்ளார்.
உலகம் முழுவதும் 7 கண்டங்களில் உள்ள உயரமான மலைச்சிகரங்களில் ஏறுவதே எனது பிரதான இலக்காகும்.
ஏற்கெனவே ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ, ரஷியாவில் உள்ள எல்பருஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள கோஸியுஸ்கோ, இந்தோனேஷியாவில் உள்ள கார்ஸ்டென்ஸ் பிரமிட், ஆர்ஜென்டீனாவின் அகான்ககுவா சிகரங்களில் ஏறி உள்ளேன்.ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள டெனாலி சிகரத்தில் ஏறவுள்ளேன்.
இது மிகவும் சவால் நிறைந்த மலையேற்றம் ஆகும். வரும் டிசம்பரில் அன்டார்டிகாவில் உள்ள வின்ஸன் மாஸிப்பை ஏற உள்ளேன். மலையேற்றத்துக்கு கடும் பொருள் செலவு ஆகும். எங்கள் சொந்த செலவில் தான் சென்று வருகிறோம். தமிழ்நாடு அரசும் எங்களுக்கு அதிக ஊக்கம் தருகிறது.
வரும் நவம்பர் மாதத்துக்குள் 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறிவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். இதன்மூலம் 7 கண்ட சிகரங்களையும் ஏறிய சிறுமிகளில் ஒருவர் என்ற சிறப்பு எனக்கு உண்டாகும்' என்கிறார் நிஷா சிவக்குமார்.
சவால்கள் நிறைந்த எவரெஸ்ட்!
நேபாளம்-திபெத் எல்லையில் 8,848.86 (29,031.7 அடி) மீ. உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரமானது மைனஸ் டிகிரி, பனிப்புயல், காற்று இல்லாமை போன்ற சவால் நிறைந்தது. இந்தச் சிகரத்தை அடைய திபெத்தில் வடக்கு ரிட்ஜ், நேபாளத்தில் தென்கிழக்கு ரிட்ஜ் வழிகள் உள்ளன.நியூஸிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி, திபெத்திய வழிகாட்டி டென்ஸிங் நார்கே ஆகியோர் 1953 மே 29-இல் ஏறி சாதனை படைத்தனர்.
இந்தியாவில் இருந்து முதன்முதலாக 1965-இல் லெப். கலோனல் அவ்தார் சிங், நவாங் கொம்பு ராணுவ தரப்பில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். 1984-இல் பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றார். 2024-இல் காம்யா கார்த்திகேயன் தனது 16-ஆம் வயதில் சிகரத்தை அடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








