படைப்பிலக்கிய வானில் ஓர் ஆதவன்!

எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன் முடிந்தது; காதலித்தவளை மறக்க முயன்றேன், முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
படைப்பிலக்கிய வானில் ஓர் ஆதவன்!
Updated on
2 min read

எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன் முடிந்தது; காதலித்தவளை மறக்க முயன்றேன், முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எத்தனைதான் உதாசீனப்படுத்தியபோதிலும், ""தூக்கிக்கொள்ளணும்'' என்று சிணுங்கும் குழந்தையைப்போல இது மீண்டும் மீண்டும் என் காலைக் கட்டிக்கொண்டதால், "ஏதோ நீயாவது என்னிடம் விசுவாசமாயிருக்கிறாயே' என்று நான் இதைத் தூக்கிச் சுமக்கத் தொடங்கியிருக்கிறேன்.'' என்கிறார் ஆதவன் என்கிற கே.எஸ்.சுந்தரம்.

 ÷1942-ஆம் ஆண்டு கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம் என எழுதி சாகித்ய அகாதெமி விருதைப் (இறந்த பிறகு) பெற்றவர். இவர் எழுதிய "முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைக்கு இவருடைய மரணத்திற்குப் பிறகுதான், 1987-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.

 ÷இது தவிர இரவுக்கு முன்பு வருவது மாலை, சிறகுகள், மீட்சியைத் தேடி, நதியும் மலையும், கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன், பெண்-தோழி-தலைவி ஆகிய குறுநாவல்களையும்; கனவுக் குமிழிகள், கால் வலி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள், புதுமைப்பித்தனின் துரோகம், முதலில் இரவு வரும் ஆகிய சிறுகதைகளையும், காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் ஆகிய நாவல்களையும்; புழுதியில் வீணை என்ற நாடகத்தையும் படைத்துள்ளார்.

 ÷நடுத்தர மக்களின் எண்ணப் போக்கையும், முரண்பாடுகளையும் பாரபட்சமின்றி துகிலுரித்துக் காட்டுபவை ஆதவனின் கதைகள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. காமத்தை உளவியல் ரீதியாக அணுகி, மக்களின் போலியான முகமூடிகளைத் தோலுரித்துக்காட்டும் தன்மையுடையது ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்'. ÷இந்நாவல் ரஷிய மொழியில் வித்தாலி, பூர்ணிகா ஆகிய இருவரால் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய பல படைப்புகள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

 ÷இந்தியன் ரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய ஆதவன், பிறகு தில்லியில் உள்ள "நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

 ÷இவர் எழுத்தாளரான நிகழ்வு மிகவும் சுவாரசியமானது. அவரே கூறியுள்ளார் படியுங்கள்: ""முதன் முதலில் நான் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளைச் சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக் கட்டும் குழந்தைகளைப்போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக் கொட்டிக்கொண்டு படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர் குழாமும் இருக்கவில்லை. நான் தனியாக - கவனிக்கப்படாதவனாக இருந்தேன். இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன்.

 ÷பள்ளி நாட்களிலேயே என் தனிமை தொடங்கிவிட்டது; எழுத்தும் தொடங்கிவிட்டது. ஏழாம் வகுப்பில் படிக்கும்போது, நானும் என் சிநேகிதன் ஒருவனுமாகச் சேர்ந்து "அணுகுண்டு' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினோம். எங்கள் இருவருக்கும் பெயரில் ஒற்றுமை - சுந்தரம். தனிமையிலும் ஒற்றுமை. ஆனால், அவன் தனிமை வேறு மாதிரியானது. என் எழுத்து, பள்ளி நாட்களிலேயே தொடங்கிவிட்ட தென்றாலும், நான் உண்மையிலேயே ஓர் எழுத்தாளனாக உருவானது 1962-இல்தான். அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

 ÷விகடனில் என் கதைகள் வெட்டப்படாமல் முழுமையாகப் பிரசுரமான ஒரே காரணத்தால் நான் தொடர்ந்து என் கதைகளை அவர்களுக்கு அனுப்பினேன். பிறகு தீபத்தில் எழுதலானேன். என் எழுத்து வாழ்வின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டமும், தீபத்தின் தோற்றமும் ஒருசேர நிகழ்ந்தது என் அதிர்ஷ்டந்தான். பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்ளின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்பிளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையறையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஓர் எழுத்தாளனைக் கெடுத்துவிடுகிறது.''

 ÷"தாஜ்மகாலில் பெüர்ணமி இரவு' என்கிற ஆதவனின் கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது. "இவர்தான் ஆதவன். ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகள் எழுதுகிறவர்' என்று பலர் கூறுமளவிற்கு முத்திரைக் கதைகளின் மூலம் சிறுகதை உலகில் முத்திரை பதித்தவர் ஆதவன்.

 ÷""எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை; மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை'' என்று மனம் திறந்துள்ளார் ஆதவன் (தமிழ்மணம் - இணையதளத்தில் "தவிர்க்க முடியவில்லை' என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள ஆதவனின் வைர வரிகள் இவை).

 ÷இளம் வயதில் நிறைய சாதித்தவர்களுள் ஆதவனும் ஒருவர். மூத்த எழுத்தாளர்கள் பலராலும் அங்கீகரிக்கப்பட்டவர். இளம் வயதிலேயே இறந்துபோனவர். ஆம்! 1987-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி இவர் இறந்ததாகக் கூறுவர். சிறிய வயதில் சாதிக்கத் தொடங்கி, மிகக்குறைந்த வயதிலேயே சாதித்துப் புகழுடம்பு எய்தியவர் ஆதவன்.

 ÷""தனியாக இருக்கத் தெரியாத, இயலாத எந்த ஒருவனும் ஓர் எழுத்தாளனாக இருக்க முடியாது'' என்பார் எழுத்தாளர் நகுலன்.

 ÷""தனிமை கண்டதுண்டு அதிலே சாரம் இருக்குதம்மா'' என்று உணர்ந்து பாடியுள்ளார் மகாகவி பாரதியார். தனிமையை விரும்பியவர்கள்தான், தனிமையை நேசிக்கத் தெரிந்தவர்கள்தான் அன்றும் இன்றும் என்றும் எழுத்துலகில் சாதித்திருக்கிறார்கள். அந்த வகையில் தனிமையை நேசித்து, படைப்புலகுக்கு வெளிச்சம் தரவந்த சூரியன் (ஆதவன்) நம் கே.எஸ்.சுந்தரம்.

 ÷அவர் உயிருடன் இருக்கும்போதே அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய "சாகித்ய அகாதெமி விருது' இறந்தபின் கிடைத்ததில் அவருக்கென்ன லாபம்? பசித்தவனுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படாத உணவும், தாகத்தால் தவித்தவனுக்குத் தகுந்த நேரத்தில் தரப்படாத தண்ணீரும், வாழும்போதே வழங்கப்படாத விருதும் உப்பில்லா பண்டம்போல பயனற்றவைதானே! இது ஆதவனுக்கு மட்டுமல்ல, பல சிறந்த எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் சந்தித்த - சந்திக்கும் நிகழ்வுகள்தான்! காலம் தாழ்ந்தே சில புகழ்கள் பூமிக்குள் புதைந்தவர்களைத் தேடிச்செல்கின்றன. இதற்கு ஆதவனும் விதிவிலக்கல்ல என்பதை காலம் காட்டிக் கொடுத்துவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com