இராமசந்திர கவிராயர் என்பவர் ஒருசமயம் ஈயாத லோபி (கஞ்சன்) ஒருவனை, இல்லாததையும் சொல்லாததையும் எடுத்துக்கூறிப் புகழ்ந்து பாடினார். அதைக்கேட்டும் அந்தக் கஞ்சன் "இல்லை' என்று சொல்லி அப் புலவருக்குக் கைவிரித்துவிட்டான். கஞ்சன் அல்லவா?
""இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
யானும் என் குற்றத்தால் ஏகின்றேனே!''
என்று வருந்திப் பாடியபடி வந்தவழியே திரும்பிச் சென்றார். புலவர் அல்லவா? திரும்பிச் செல்லும்போது அவரின் சிந்தனைச் சிறகடித்தது. உலகில் ஒவ்வொன்றுக்கும் ஓர் உவமை கூறலாம். ஆனால், இந்தக் கஞ்சனுக்கு என்ன உவமை சொல்லலாம்? என்ற ஆராய்ச்சியில் புலவர் இறங்கினார்.
கல்லைக்கொண்டு கோயில் கட்டமுடியும், சிலை வடிக்க முடியும்; அதனால் இந்தக் கஞ்சனுக்குக் கல்லை உவமையாகச் சொல்லக்கூடாது. கழுதை என்று சொல்லலாமா? என்றால், கழுதை அழுக்கு மூட்டைகளைச் சுமக்கப் பயன்படும்; அதனால் "கழுதை' என்று சொல்வதும் பொருந்தாது. எருமைக்கடா எனச் சொன்னால் அதுவும் உழுவதற்குப் பயன்படுகிறது, அதையும் கூறமுடியாது. அருவருக்கத்தக்க மலத்தை உவமை கூறலாம் என்றால், அதுவும் பன்றிக்கு உணவாகிறது. காளையைச் சொல்லலாம் என்றால், புல்லைத் தின்னும் காளைமாடும் சிவனுக்கு வாகனமாகிறது; பொதியையும் சுமக்கிறது. "பிணம்' என்று சொல்லலாம் என்றால், அதுவும் புரோகிதர்களுக்குப் பொருள் கிடைக்க வழிவகை செய்கிறது. குட்டிச்சுவரை உவமை கூறலாம் என்றால், அதுகூட மாடு தனது உடம்பைத் தேய்த்துக்கொள்ளப் (உரச) பயன்படுகிறது; சிறுநீர் கழிக்க மறைவிடமாகவும் உதவுகிறது. துடைப்பக்கட்டை என வசைபாடக் கூட முடியாது. ஏனென்றால், அது மாட-மாளிகைகளைச் சுத்தம் செய்ய
உதவுகிறது.
கல், கழுதை, பன்றி, எருமைக்கடா, காளைமாடு, பிணம், குட்டிச்சுவர், துடைப்பம் ஆகிய இத்தனையும் விடுத்து, இந்தக் கஞ்சப்பயலுக்கு வேறு எதை உவமை கூறுவது என நினைத்துக்கொண்டே சென்ற புலவர், "இவனுக்கு நிகர் இவனே' எனக் கடைசியாகப் பாடிமுடித்தார் (எதனோடும் ஒப்பிடத் தகுதியற்றவன் என்ற பொருளில்). பாடல் இதுதான்!