எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. இதில் ஆறாம்பத்து நெடுஞ்சேரலாதனின் மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் எனும் பெண்பாற் புலவர் பாடியது.
"தண்டாரணியத்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்; பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்; வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்; மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்; கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்' என்கிறார் புலவர்.
பிணி நிறைந்த மாசித் திங்களில் விலங்குகளும் நடுங்கும் குளிரை உடையதென்று எனும் காரணத்தால் "மாகூர் திங்கள்!' என ஒரு பாடல் எழுதியுள்ளார்.
"பகல்பொழுது குறைந்தும், இரவுப்பொழுது நெடியதுமான மாசியில் விலங்கினமும் குளிராலே நடுங்கும். அந்நேரத்தில் காட்டின் வழியே செல்லும் பாண்மகன் உவப்படைய, இருள் மறைந்து விடியலும் வரும். பரந்துள்ள இருள் அகல, ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பி கீழ்வானம் சிவக்க எழும். அதுபோல இரத்தலையே வாழ்வியலாகக் கொண்ட ஏழ்மையிலும், ஏழ்மையாக வாழும் குடிமக்கள் பசியாற கல்வி, வீரம், அறம் முதலியவற்றைக் கொண்ட பெருவேந்தனான சேரலாதனே அவர்தம் பசியாற்றினான். உனக்கு பகைவராக விளங்கும் வேந்தர்கள்கூட நின் வீரத்தின் தன்மை அறியாதவராய் போரிட்டாலும் பின் தோற்று, பணிந்து, திரைப் பொருளைத் தரும்போதுகூட அவர்தம் பகை மறந்து சினத்தையும் கைவிடும் நின் குணம் வாழ்க!
ஞாயிறு தோன்றியதும் இருளும், குளிரும் அகல்வது போல, சேரலாதன் தோன்றியதும் இரவலர் சிறுமை நீங்கி அவரும் வளமோடு வாழ்வர் என்ற கருத்தை மையமாக வைத்து அவன் கொடைச் சிறப்பைக் கூறும் பாடலில் சில வரிகள்:
"பகல் நீடு ஆகாது இரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மாகூர் திங்கள்
பனிச்சுரம் படரும் பாணம் மகன் உவப்பப்
புல்லிருள் விடியப் புலம்பு சேரன் அகலப்
பாயிருள் நீங்கப் பல்கதிர் பரப்பி (5)
ஞாயிறு குணமுதல் தோன்றியா அங்கு
இரவல் மாக்கன் சிறுகுடி பெருக
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை, வீற்றிருங் கொற்றத்து
செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம் (10)
-உ.இராசமாணிக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









