தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொன்னம்பலனாரின் ‘நீதி வெண்பா’ உரை!

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட பல நீதிநூல்கள் உள்ள நம் தமிழில் ‘நீதிவெண்பா’ என்றொரு நூலும் நீதிநெறியைக் கூறும் நூலாகும்.

News image
Updated On :9 ஜூன் 2020, 9:58 am

சே. ஜெயசெல்வன்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட பல நீதிநூல்கள் உள்ளன. தமிழில் "நீதிவெண்பா' என்றொரு நூலும் நீதிநெறியைக் கூறும் நூலாகும். இந்நூலை இயற்றிய ஆசிரியர் இன்னாரென்பது தெரியவில்லை. கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 வெண்பாக்களைக் கொண்ட அருமையான நூல் இது. இதற்கு யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவரான பொன்னம்பலனார் என்பவரின் உரை விளக்கம் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
 "உணவே மருந்தாகும்' என்பது நம் முன்னோர் வாக்கு. நோய்கள் பல நம்மை அச்சுறுத்துவதற்குக் காரணம் சரியான உணவை முறையாக உண்ணாமைதான். நமது உணவு பழக்கங்களே நோய்களைத் தீர்மானிக்கின்றன. திருவள்ளுவப் பெருந்தகை, "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது / அற்றது போற்றி உணின்' (942) என்று உணவு உண்ணும் முறையைச் சொல்லியிருக்கிறார். நீதி வெண்பாவில் உணவு உண்ணும் முறையை நான்கு வகைகளில் உரைக்கிறார் அதை இயற்றிய புலவர்.
 "ஒருபோது யோகியே யொண்டளிர்க்கை மாதே
 இருபோது போகியே யென்ப - திரிபோது
 ரோகியே நான்குபோ துண்பா னுடல்விட்டுப்
 போகியே யென்று புகல்' (பா. 9)
 "ஒருபோது (ஒரு வேளை) மட்டும் உணவு உண்பவன் யோகி எனப்படுவான்; இரண்டு வேளை உண்பவன் போகி எனப்படுவான்; மூன்று வேளை உண்பவன் நோயாளியே; நான்கு வேளை உண்பவன் இறப்பவனே' என்கிறார். மூன்று வேளை உணவு உண்பது நோய்க்கு இடம் தரும் என்கிறார். நம் முன்னோர் காலை, மதியம் என்று இரண்டு வேளை மட்டுமே உணவு உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள்.
 யோகிக்கு ஒருவேளை போஜனமும், போகிக்கு இரண்டு வேளை போஜனமும் உரியன; மூன்று கால போஜனம் நோயையும், நான்கு கால போஜனம் மரணத்தையும் உண்டாக்கும் என்கிறார்.
 ஒருவனுக்குத் தாய் இறந்துவிட்டால் சுவையான உணவு கிடைக்காது. தந்தை இறந்துவிட்டால் சிறந்த கல்வி கிட்டாது. உடன்பிறந்த சகோதரர்கள் இறந்துவிட்டால் துணையாக நிற்கும் தோள் வலிமை போய்விடும். ஆனால், மனைவி இறந்தாலோ இவை அனைத்தும் போய்விடும் என்கிறது மற்றொரு பாடல்.
 "மாதா மரிக்கின் மகனாவி னற்சுவைபோந்
 தாதா வெனிற்கல்வி தானகலும் - ஓதினுடன்
 வந்தோன் மரித்துவிடில் வாகுவலி போமனையேல்
 அந்தோ இவையாவும் போம்' (பா. 61)
 உறவினர் இல்லாத இல்வாழ்வு துன்பம் தரும் என்பதை, "பந்தமில்லாத மனையின் வனப்பின்னா' என்று கபிலர் குறிப்பிட்டுள்ளார். இல்லற இனிமைக்கு மனைவியே துணை என்பதை சங்க நூல்கள் சொல்கின்றன.
 "தாயில்லாத சிறுவனுக்குப் போஜன சுகமும், பிதா இல்லாத சிறுவனுக்குக் கல்வியும், சகோதரர் இல்லாதவனுக்குத் தைரியமும், மனைவி இல்லாதவனுக்கு எல்லாச் சுகமும் கெடும்' என்பது பொன்னம்பலனார் உரை.
 -சே. ஜெயசெல்வன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.