நம் உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் வீக்கம் கண்டிருந்தாலோ உடலின் மூட்டுகளில் வலி இருந்தாலோ அந்த இடத்தில் பத்துப் போடும் வழக்கம் உண்டு. எடை மிகுந்த பொருள்களைத் தூக்குவதால் முதுகில் வலி உண்டாகும். அப்படி இப்படித் திருப்பும்போது கழுத்தும் வலிக்கும். அதற்கும் பத்துப் போடுவர். அரக்கு, மெழுகு, தானியங்களின் மாவு இவற்றால் பத்துப் போட்டுக் காயவைப்பர். பின் அவை தானாகவே செதில் செதிலாக உதிர்ந்து வலியும் குணமாகிவிடும்.
இந்த மருத்துவ முறையை "அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன' என்று (நற்.பா.25) பேரி சாத்தனார் பாடல் காட்டுகிறது. "அழகிய வளைந்த முதுகினை அரக்கு ஈர்த்துப் பிடிப்பதுபோல' என்று இப்பாடலில் ஓர் உவமை காட்டப்படுகிறது.
உடலில் போடப்படும் அரக்குப் பத்து காயக் காய செதில் செதிலாக அடுக்குகளாகக் காணப்படும். அப்படிப்பட்ட ஒழுங்கான வரி அடுக்குகளைக் கொண்ட பிடவம் பூ பூத்திருக்கிறது. அதன் மணம் தொலைதூரம் வீசும். அத்தகைய பிடவ மரங்கள் மிகுதியாக உள்ள மலைநாட்டின் தலைவன் என்று புலவர் தலைவனைக் குறிப்பிடுகிறார்.
இப்பாடல் அடிகளில் ஓர் உவமையையும் காண முடிகிறது. அந்தப் பிடவம் பூவின் மகரந்தத் தூள்கள் அப்பூவுக்கு வந்து தேன் உண்ணும் வண்டின் உடலில் ஒட்டிக் கொள்ளும். அந்த வண்டானது பொன் உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல் போலத் தோன்றுமாம்.
அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ்வரி இதழ சேண்நாறு பிடவின்
நறுந்தாது ஆடிய தும்பி, பசுங்கேழ்ப்
பொன்உரை கல்லின், நல்நிறம் பெறூஉம்
வள மலை நாடன்!